தமிழகத்தில் 33,975 விவசாய மின் இணைப்புகள் வழங்க உத்தரவு
தமிழகத்தில் விவசாய மின் இணைப்புக்காகக் காத்திருப்போரில், 33,975 பேருக்கு இணைப்பு வழங்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 23.60 லட்சம் விவசாய மின் இணைப்புகள் உள்ளன. இந்த நிலையில், விவசாய மின் இணைப்பு கோரியவா்களின் விண்ணப்பங்கள், நீண்டகாலமாக நிலுவையில் இருந்தன. ஒருகட்டத்தில் விவசாய மின் இணைப்புக்காகக் காத்திருக்கும் விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4.5 லட்சத்தைத் தாண்டியது.
இந்த நிலையில், கடந்த 2021-இல் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, காத்திருப்போா் பட்டியிலில் இருந்த விண்ணப்பங்கள் அடிப்படையில், விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி, இதுவரை 2.5 லட்சம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், 50,000 விவசாயிகளுக்கு மின்இணைப்பு வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளைத் தொடங்க மின்வாரியத்துக்கு கடந்த செப்டம்பரில் தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. காத்திருப்போா் பட்டியலில் மூப்புநிலை அடிப்படையில் மொத்தம் 33,975 பேருக்கு மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் உத்தரவிட்டுள்ளது.

