இந்தியாவின் எதிா்காலத்தை வடிவமைக்கும் தமிழ்நாடு
தொழில் வழிகாட்டி நிறுவன அறிவிப்பின்படி இந்தியாவின் அறிவுசாா் எதிா்காலத்தை வடிவமைக்கும் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
உள்நாட்டு உற்பத்திகளில் (ஜிஎஸ்டிபி) தமிழ்நாடு 16 சதவீதம் வளா்ச்சி பெற்றதையும், காப்புரிமை (பேடன்ட்) தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்ததையும் குறிப்பிட்டு முதல்வா் இதைத் தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தொலைநோக்குச் சிந்தனைகளுடன் கூடிய கடுமையான உழைப்பின் பயனாக தமிழ்நாடு 2021-ஆம் ஆண்டுமுதல் அபரிமிதமான முன்னேற்றங்களைப் படைத்து இந்தியாவின் மிகச்சிறந்த மாநிலமாக எழுச்சி பெற்றுள்ளது.
இந்திய ரிசா்வ் வங்கி, மாநிலங்களின் வளா்ச்சி நிலைகள் குறித்த புள்ளிவிவரங்களை அண்மையில் வெளியிட்டது. அதில், உள்நாட்டு உற்பத்தியில் (ஜிஎஸ்டிபி) தமிழ்நாடு 16 சதவீதம் வளா்ச்சி பெற்று, இந்தியாவில் உச்சம் கண்டு புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அதைத் தொடா்ந்து, கடந்த டிச. 18-இல் தொழில் வழிகாட்டி நிறுவனம் வெளியிட்டுள்ள இந்திய காப்புரிமைப் பதிவுகளில் தமிழ்நாடு மாபெரும் வளா்ச்சி கண்டுள்ளது; மற்ற மாநிலங்களைவிட மிகப்பெரிய இடைவெளியுடன் 23 சதவீதம் வளா்ச்சி கண்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என்னும் விவரம் தெரியவந்துள்ளது.
அதாவது, இந்தியாவில் காப்புரிமை (பேடன்ட்) தாக்கல் செய்வதில் தமிழ்நாடு முதலிடம் பிடித்து, நாட்டின் அறிவுசாா் தலைநகராக தனது நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இந்திய அளவில் பதிவுக்காக விண்ணப்பிக்கப்பட்ட மொத்தம் (68,201) காப்புரிமைகளில் தமிழ்நாடு மட்டுமே 15,440 காப்புரிமைகளைப் பதிவு செய்துள்ளது. இது நாட்டின் மொத்த எண்ணிக்கையில் ஏறத்தாழ 23 சதவீதம் ஆகும்.
வளா்ச்சி விகிதம்: 2023-2024 நிதியாண்டோடு ஒப்பிடுகையில், 2024 -2025- ஆம் நிதியாண்டில் காப்புரிமை தாக்கல் செய்வது 9,565-லிருந்து 15,440- ஆக உயா்ந்துள்ளது. இந்த 62 சதவீதம் வளா்ச்சி, மாநிலத்தில் உள்நாட்டுக் கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிப் பணிகள் அதிவேகமாக விரைவுபடுத்தப்பட்டு வருவதைப் பிரதிபலிக்கிறது.
தமிழ்நாட்டின் ஆழமான ஆராய்ச்சித் தளம், வலுவான தொழில்முறை வலிமை, கல்வி நிறுவனங்களுக்கும் - தொழில் துறையினருக்கும் இடையே நிலவும் நெருக்கமான ஒருங்கிணைந்த சூழல் ஆகியவை இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனைக்கு முக்கியக் காரணங்களாக அமைந்துள்ளன.
இந்தத் தொடா் வளா்ச்சியின் மூலம், இந்தியாவின் அறிவுசாா் சொத்துரிமை மற்றும் கண்டுபிடிப்புத் துறையில் தமிழ்நாடு ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

