

தமிழகத்தை போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றி இருக்கிறோம் என்று மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
திருத்தணி ரயில் நிலையம் அருகே, கஞ்சா போதையில் இருந்த நான்கு சிறார்கள் வடமாநில இளைஞரை அரிவாளால் வெட்டி கொடூரமாகத் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, “வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், செய்தியாளர்களுடன் பேசுகையில் தெரிவித்ததாவது:
“போதைப் பொருள்களுக்கு எதிராக இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு எவ்வளவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சியினர் அனைவரும் அறிவார்கள். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுதான் போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்தது.
குட்கா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் கூறினார். இல்லையென மறுத்த நிலையில், மறுநாளே 21 சட்டப்பேரவை உறுப்பினர்கள் பான் மசாலா உள்ளிட்ட பொருள்களை எடுத்துச் சென்று காட்டினர். அக்கறை உள்ள முதல்வராக இருந்திருந்தால் எங்கே கிடைத்தது எனக் கேட்டு நடவடிக்கை எடுத்திருப்பார். ஆனால், 21 எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
நாங்கள் பொறுப்பேற்ற பிறகு மிகப்பெரிய அளவில் கட்டுப்படுத்து போதைப் பொருள் இல்லாத மாநிலமாக மாற்றியுள்ளோம். கஞ்சாவைப் பொறுத்தவரை தமிழகத்தில் இல்லாத நிலையை உருவாக்கியுள்ளோம். எதிர்க்கட்சியினர் எங்கேயாவது விற்கிறார்கள் என்று கூறினால், அவர்களின் பெயர் ரகசியம் காத்து நடவடிக்கை மேற்கொள்வோம்.
பள்ளி, கல்லூரிகளில் போதைப் பொருள்களுக்கு எதிராக ஆண்டுதோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.