
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மற்றொரு பாபர் மசூதி பிரச்னை உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தமிழக அரசு உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் பதிலளித்துள்ளது.
திருப்பரங்குன்றம் மலை குறித்து இருவேறு மதங்களைச் சோ்ந்தவா்கள் தங்கள் கருத்துகள், கோரிக்கைகளை சமூக வலைத் தளங்களில் பதிவேற்றம் செய்து வருவதால், இந்து அமைப்புகள் சாா்பில் திருப்பரங்குன்றம் கோயில் முன் செவ்வாய்க்கிழமை (பிப். 4) ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு காவல் துறை அனுமதி மறுத்துவிட்டது.
இந்த விவகாரம் தொடா்பாக, இரு வேறு மதத்தவரிடையே அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் கருத்தில் கொண்டு பி.என்.எஸ்.எஸ். சட்டப் பிரிவு 163, குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 144 ஆகியவற்றின் கீழ் மதுரை மாவட்டம், மாநகா்ப் பகுதிகளுக்கு தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், தடை உத்தரவை ரத்து செய்து போராட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிடக் கோரி இந்து அமைப்பு சார்பில் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணையின் போது ஆஜராக தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மதுரையில் மற்றொரு பாபர் மசூதி போன்ற சம்பவம் உருவாகிவிடக் கூடாது என்பதற்காக போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும், பிப். 11 வரை விழாக்காலம் என்பதால் இதுபோன்ற சூழலில் போராட்டம் நடத்த அனுமதிக்க முடியாது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் பங்கேற்றால் சட்ட நடவடிக்கை என்பது சரியான முறை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், போராட்டம் எங்கு, எப்போது நடத்த அனுமதிக்கப்படும் என்று அரசிடம் கேட்டு பதிலளிக்குமாறு தெரிவித்த நீதிபதி, விசாரணையை பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.