மோடியே ஒப்புக்கொள்கிறார்.. இனி என்ன சொல்லப் போகிறார் ஆளுநர்? அமைச்சர் ரகுபதி கேள்வி

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் மோடியே ஒப்புக்கொண்டுள்ளதாக அமைச்சர் ரகுபதி தகவல்.
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
பிரதமர் மோடி (கோப்புப்படம்)
Updated on
1 min read

மாநில அரசுக்குக் கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என தமிழக சட்டத் துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில், பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்களின் செயல்பாடுகள் குறித்து மிகப் பெருமையாக உரையாற்றியிருக்கிறார்.

அந்த உரையை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இணைத்திருக்கும் அமைச்சர் ரகுபதி, பாஜக ஆளாத மாநிலங்களில், ஆளுநர்களின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

விடியோவை இணைத்து, அமைச்சர் ரகுபதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, நாடாளுமன்றத்தில் அவை மரபுகளை பற்றி பேசி சிலாகிக்கும் பிரதமர் மோடி அவர்களுக்கு பாஜக ஆளாத மாநிலங்களின் சட்டமன்ற மரபுகளை ஆளுநர்கள் எவ்வாறு சிதைக்கின்றனர் என்பது தெரியாதா?

தமிழ்நாட்டில் திரு.மோடி நியமித்திருக்கும் ஆளுநர் ரவி அவர்களோ தமிழ்நாடு அரசின் உரையை வாசிப்பது கூட இல்லை!

ஆளுநரோடு முரண்பட்ட போதிலும் பேரவை நாகரிகம் கருதி மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆளுநருக்கு மதிப்பளித்து சட்டப்பேரவையில் உரையாற்ற சபாநாயகர் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால் நாகரிகம் என்றால் கிலோ எத்தனை ரூபாய் என கேட்கும் அளவு நடந்து கொள்ளும் ஆளுநர் ரவி பேரவை மாண்பை மதிக்காமல் உரையை படிக்காமல் உதாசீனப்படுத்தினார்.

சட்டப்படி மாநில அரசு தயாரித்து கொடுக்கும் உரையை தான் ஆளுநர் வாசிக்க வேண்டும் அதை தான் நாம் வலியுறுத்தினோம். மாநில அரசிற்கு கட்டுப்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டும் என்ற சட்டப்படியான உண்மையை பிரதமர் மோடியே ஒத்துக்கொள்கிறார். இனி என்ன சொல்லப் போகிறீர்கள் ஆளுநர் ரவி அவர்களே? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அமைச்சர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com