
தில்லியைப் போல 2026-ல் தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தில்லி பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சென்னை கமலாலயத்தில் பாஜகவினர் மேள தாளங்கள் முழங்க ஆடிப் பாடி பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் உற்சாகமாக சனிக்கிழமை கொண்டாடினர்.
இந்த கொண்டாட்டத்தில் பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டு பாஜக தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், பாஜக தலைநகரில் வெற்றி பெற்றதற்காக பிரதமருக்கும் தில்லியைச் சார்ந்த தலைவர்களுக்கும் அகில பாரத தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் எங்கள் வாழ்த்துகளை சமர்ப்பிக்கிறோம்.
தலைநகரில் பாஜக தலை நிமிர்கிறது, ஆம் ஆத்மி தலை குனிகிறது. காங்கிரஸ் நிலை குலைகிறது. தில்லி தேர்தலுக்காக தமிழகத்தில் இருந்து நிறைய தலைவர்கள் அங்கே சென்று பிரசாரம் செய்தார்கள். என்னைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய வெற்றி. பாஜக வளர்ச்சிக்கான திட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் என்பதற்காக தலைநகரில் மக்கள் பாஜகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள்.
தலைநகரிலேயே தாமரை மலரும் போது தமிழகத்திலும் தாமரை மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தலைநகரில் தாமரை மலர்ந்ததை கொண்டாடுவதைப் போல 2026-ல், தமிழகத்திலும் தாமரை மலர்வதை கொண்டாடுவோம்.
ஊழலை ஒழிப்போம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்த கேஜரிவால் ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்கு சென்றார். தில்லியில் எந்த இடத்திலும் கேஜரிவால் வளர்ச்சியை தரவில்லை. தில்லி மக்கள் உறுதியான முடிவை தந்திருக்கிறார்கள். திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி தேர்தலை முறையாக எதிர்கொள்ள முடியவில்லை.
இங்குள்ள வெற்றியை கூட கொண்டாட முடியாத சூழ்நிலையில் திமுக இருக்கிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம் வாழும் இடங்களில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





