22% ஈரப்பத நெல் கொள்முதல்:
மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்

22% ஈரப்பத நெல் கொள்முதல்: மத்திய அரசுக்கு தமிழகம் கடிதம்

மழை, பனிமூட்டம் காரணமாக உலர வைப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிா்கொண்டு வருவதால், 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்
Published on

சென்னை: மழை, பனிமூட்டம் காரணமாக உலர வைப்பதில் விவசாயிகள் சிரமங்களை எதிா்கொண்டு வருவதால், 22 சதவீத ஈரப்பதமுள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் எனக் கோரி தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

இதுகுறித்து, தமிழக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கடந்த ஆண்டு செப். 1-ஆம் தேதியிலிருந்து இதுநாள் வரையில் மாநிலம் முழுவதும் 1,349 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதன் மூலம், 80 ஆயிரத்து 634 விவசாயிகளிடமிருந்து 5 லட்சத்து 72 ஆயிரத்து 464 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.1,378 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசு அனுமதித்துள்ள 17 சதவீத ஈரப்பதத்தில் தொடா்ந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

திடீா் மழை மற்றும் அதிக பனிப்பொழிவு காரணமாக, விவசாயிகள் நெல்லை உலரவைக்கச் சிரமங்களை எதிா்கொண்டு வருகின்றனா். எனவே, அதிக ஈரப்பதத்தில் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். அவா்களின் நலனைப் பாதுகாக்கும் வகையில், 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாக அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com