சசிகாந்த் செந்தில், கனிமொழி சோமு, தமிழிசை செளந்தரராஜன், கெளதமி, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் (இடமிருந்து வலம்)
சசிகாந்த் செந்தில், கனிமொழி சோமு, தமிழிசை செளந்தரராஜன், கெளதமி, தினமணி ஆசிரியர் கி. வைத்தியநாதன் (இடமிருந்து வலம்)Express

அரசியல் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும்: தமிழிசை

கல்விச் சிந்தனை அரங்கில் தமிழக அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் விவாதம்..
Published on

அரசியல் விவாதங்கள் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

போருக்குச் செல்வதைப் போன்று அரசியல் செய்யாமல் மகிழ்ச்சியுடன் அரசியல் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் ’கல்விச் சிந்தனை அரங்கு 2025’ இறுதிநாள் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஜன. 28) நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ’பொது விவாதத்தில் மாறுபட்ட இடைவெளி’ குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தராஜன், காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில், திமுக எம்.பி., கனிமொழி சோமு, அதிமுகவின் கெளதமி ஆகியோர் கலந்துகொண்டு விவாதித்தனர். இந்த நிகழ்வுக்கு தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் தலைமை வகித்தார்.

இதில் தமிழிசை செளந்தரராஜன் கூறியதாவது,

விவாதங்கள் கலகலப்பாக இருப்பது மாறி கைக்கலப்பாக முடிந்துவிடுகிறது. எதிர்க்கட்சித் தலைவர்களுக்குள் நல்ல புரிந்துணர்வு, மரியாதை இருக்க வேண்டும். ஆனால் எதிர்க்கட்சியுடன் புகைப்படம் எடுக்கவே பயம். பேசினாலே கூட்டணி என்று கூறிவிடுவார்கள் என்ற பயம் இருக்கிறது.

அரசியல் இன்னும் அதிக நாகரீகத்தோடு இருக்க வேண்டும். போருக்குச் செல்வதைப் போன்று அரசியல் செய்யாமல் மகிழ்ச்சியுடன் அரசியல் செய்ய வேண்டும்

இளைஞர்கள் அதிக எண்ணிக்கையில் அரசியலுக்கு வர வேண்டும்; குறிப்பாக பெண்கள் அதிகம் வர வேண்டும். எதிர்க்கருத்தை நாகரிகமாகப் பதிவு செய்வோம்

சமூகவலைதளங்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் வருத்தமளிக்கிறது. விவாதங்கள் ஆக்கப்பூர்வமானதாக இல்லை; அறிவுப்பூர்வமாக இல்லை; பரபரப்பு மட்டுமே உள்ளது.

சசிகாந்த் செந்தில்

அரசியல் நாகரிகம் இருந்தாலும்; அநாகரிக அரசியலே ஊடகத்தால், சமூகவலைதளங்களால் காட்டப்படுகிறது. செய்தி பொழுதுபோக்காக மாறிவருகிறது.

சமூகவலைதளங்கள் வாக்கு அரசியலில் ஆதிக்கம் செலுத்தலாம்; ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தாது.

சமூகத்தில் எதைப்பற்றி விவாதிக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது ஊடகமாக உள்ளது எனக் குறிப்பிட்டார்.

கனிமொழி சோமு

கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் இருந்து வரும் எம்.பி.க்களை பார்த்துக்கொள்ள முடியாத சூழலே புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் உள்ளது.

சட்டப்பேரவைகள் வெவ்வேறாக இருந்தாலும் எம்.பி.க்குள் எந்த பாகுபாடுகளும் கிடையாது; தில்லி எல்லையை விட்டு மாநிலங்களுக்குள் வந்தால் மட்டுமே வேறுபாடுகளை உணர முடிகிறது.

உள்ளூர் அரசியலுக்கு ஏற்ப முகங்கள் மாறுகின்றன; சிந்தனை, கொள்கைகள் மாறுகின்றன. எல்லைகளுக்கு அப்பாற்பட்டு சிந்தித்தால் அரசியல் சச்சரவுகளைத் தவிர்க்கலாம்.

கொள்களைப் பற்றி மக்கள் பேச வேண்டும்; மக்கள் பிரதிநிதிகளை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கக் கூடாது எனக் கேட்டுக்கொண்டார்.

கெளதமி

ஒருவரின் கருத்தை வெளிப்படுத்த உரிமைகள் இருக்கிறது என்பதை மதித்து, நாம் பேசுவதற்கான நேரம் வரும்வரை காத்திருந்து சொல்ல வேண்டியதை நாகரீகமாகச் சொல்ல வேண்டும்.

ஒரு விஷயத்தை எதிர்மறையாகப் பேசினால் மட்டுமே பலரால் பார்க்கப்படுகிறது; இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com