/

ஆய்வுக்கு அஞ்சி 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடல் !

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்கவிருந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

News image

கோப்புப்படம்.

Updated On :14 ஜூலை 2025, 11:10 am IST

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வு நடக்கவிருந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் மூடப்பட்டுள்ளன.

விருதுநகா் மாவட்டத்தில் 1,070 பட்டாசு ஆலைகள் உள்ளன. மாவட்ட வருவாய் அலுவலா், வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையினரின் உரிய அனுமதி பெற்று இந்த ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த ஜூலை 1-ஆம் தேதி சின்னக்காமன்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாலா்கள் உயிரிழந்தனா்.

பலா் காயமடைந்தனா். ஜூலை 6-ஆம் தேதி கீழத்தாயில் பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒருவா் உயிரிழந்தாா். பலா் காயமடைந்தனா். வெடி மருந்து கலவை அல்லது மருந்து செலுத்துதல் போன்ற பணியின்போது உராய்வு காரணமாக இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என ஆய்வுசெய்ய தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அண்மையில் உத்தரவிட்டது.

இந்த உத்தரவையடுத்து 15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப்பட்டு விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பட்டாசு ஆலைகளில் திங்கள்கிழமை ஆய்வு நடக்கவிருந்தன. இந்த நிலையில், 200க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இன்று மூடப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது.

விதிமீறல் இருந்தால் உடனடியாக உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரித்ததன் காரணமாக ஆய்வுக்கு அஞ்சி ஆலைகளை உரிமையாளர்கள் மூடி உள்ளதாக கூறப்படுகிறது.

Summary

More than 200 firecracker factories have been shut down in Virudhunagar district today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.