
இந்த ஆண்டில்,மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை மூன்றாவது முறையாக எட்டியுள்ளதால், காவிரி கரையோரம் வசிக்கும் பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக கர்நாடக மற்றும் கேரள மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நடப்பு நீர்ப்பாசன ஆண்டில் முதல் முறையாகவும் மேட்டூர் அணையின் வரலாற்றில் 94வது ஆண்டாகவும் ஜூன் 29ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
அதன் பிறகு நீர்வரத்து குறைந்ததாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதாலும் ஜூலை 3 ஆம் தேதி அணையின் நீர்மட்டம் படிப்படியாக குறையத் தொடங்கியது. இரண்டு நாள்களுக்குப் பிறகு ஜூலை 5 ஆம் தேதி நடப்பு நீர் பாசன ஆண்டில் இரண்டாவது முறையாக மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது.
மீண்டும் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை தணிந்ததால் அணைக்கு வரும் நீரின் அளவு குறைந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த 14 ஆம் தேதி 120 அடிக்கு கீழே குறைந்தது.
இதனால் உபரி நீர் போக்கி மூடப்பட்டது. கடந்த மூன்று நாள்களாக கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால், கபினி கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்து அணைகளின் பாதுகாப்பு கருதி, காவிரியில் உபரி நீர் திறக்கப்பட்டது.
கர்நாடக அணைகளின் உபரி நீர் வரத்து காரணமாக இன்று(ஜூலை 20) காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 31,500 கன அடியாக அதிகரித்தது. இதனால் நடப்பு நீர் பாசன ஆண்டின் மூன்றாவது முறையாக இன்று காலை மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. மேட்டூர் அணை நிரம்பியதை எடுத்து உபரி நீர் கால்வாய் வழியாக வெள்ளநீர் விநாடிக்கு 8,500 கன அடி வீதம் காலை 8 மணி முதல் திறக்கப்பட்டது.
இன்று காலை மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் வரத்து விநாடிக்கு 31,500 கன அடியாகவும் இருந்தது. காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல் மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது உபரி நீர் போக்கி வழியாக உபரி நீர் விநாடிக்கு 8,500 கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.
உபரி நீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உபரி நீர் போக்கி பாதையில் உள்ள தகமாபுரி பட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர், புது பாலம்,தொட்டில்பட்டி பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி வருவாய்த் துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... ஒரு உண்மை தெரிஞ்சாகணும் சாமி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.