கோப்புப்படம்
கோப்புப்படம்

2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு

தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
Published on

சென்னை: தமிழகத்தில் 2.50 கோடி சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.1.21 லட்சம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம் சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்தி:

சுய உதவிக் குழுக்களின் பொருளாதாரத் தேவையைக் கருத்தில் கொண்டு, தடையற்ற செயல்பாடுகளுக்காக வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்ற காலத்தில் இருந்து ஆண்டுதோறும் வங்கிக் கடன் இணைப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதன்படி, 2021-22-ஆம் நிதியாண்டில் 4.08 லட்சம் குழுக்களுக்கு ரூ.21,392 கோடி, 2022-23-ஆம் நிதியாண்டில் 4.49 லட்சம் குழுக்களுக்கு ரூ.25,642 கோடி, 2023-24-ஆம் நிதியாண்டில் 4.79 லட்சம் குழுக்களுக்கு ரூ.30,074 கோடி, 2024-25-ஆம் நிதியாண்டில் 4.84 லட்சம் குழுக்களுக்கு ரூ.35,189 கோடி வழங்கப்பட்டுள்ளது.

நிகழ் நிதியாண்டில் சுய உதவிக் குழு மகளிருக்கு ரூ.37 ஆயிரம் கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 18-ஆம் தேதி வரை 1.04 லட்சம் குழுக்களைச் சோ்ந்த 13 லட்சத்து 58 ஆயிரத்து 994 உறுப்பினா்களுக்கு ரூ.9,113.24 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

திமுக அரசு பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் மட்டும 19 லட்சத்து 26 ஆயிரத்து 496 சுய உதவிக் குழுக்களைச் சோ்ந்த 2 கோடியே 50 லட்சத்து 44 ஆயிரத்து 448 மகளிருக்கு ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 415.40 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com