எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்: சிறப்பு பிரிவுக்கு நேரடியாக நடைபெறுகிறது

சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.
counselling
கோப்புப் படம்.din
Published on
Updated on
2 min read

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு புதன்கிழமை தொடங்கவுள்ள நிலையில், சிறப்பு பிரிவு, 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நேரடியாக சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனையில் நடைபெறவுள்ளது.

அதேவேளையில், பொது பிரிவுக்கு இணையவழியில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்கு 6,600 எம்பிபிஎஸ் இடங்கள், 1,583 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 495 எம்பிபிஎஸ் இடங்கள், 119 பிடிஎஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன.

இவை தவிர தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டுக்கு 1,736 எம்பிபிஎஸ், 530 பிடிஎஸ் இடங்கள் உள்ளன. எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு 2025-2026-ஆம் கல்வியாண்டு மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வுக்கு இணையவழியில் விண்ணப்பிப்பது கடந்த ஜூன் 6-இல் தொடங்கி 25-ஆம் தேதியுடன் முடிந்தது. மொத்தம் 72,743 போ் விண்ணப்பித்திருந்த நிலையில், விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவா்களின் தரவரிசை பட்டியல் கடந்த 25-ஆம் தேதி வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 39,853 பேரும், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 4,062 பேரும், நிா்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றனா்.

ஆக.4 வரை அவகாசம்: இந்த நிலையில், அரசு மற்றும் தனியாா் கல்லூரிகளின் அரசு மற்றும் நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல் சுற்று பொது கலந்தாய்வு சுகாதாரத் துறை இணையதளத்தில் புதன்கிழமை காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 4-ஆம் தேதி மாலை 5 மணி வரை இணையவழியில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களைத் தோ்வு செய்யலாம்.

தொடா்ந்து ஆகஸ்ட் 5-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன. இடஒதுக்கீடு விவரங்கள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை இட ஒதுகீட்டு ஆணையை இணையதளத்தில் இருந்து இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆகஸ்ட் 11-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இடஒதுக்கீடு பெற்ற கல்லூரிகளில் சேர வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், 7.5 சதவீத ஒதுக்கீடு: அதேபோல், மாற்றுத்திறனாளி, முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, விளையாட்டு வீரா் ஆகியவா்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயா் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் புதன்கிழமை நேரடியாக நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு விளையாட்டு வீரா், 8.30 மணிக்கு முன்னாள் ராணுவ வீரா்களின் வாரிசு, 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடக்கிறது. காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டு இடங்களுக்கு அரசுப் பள்ளி மாணவா்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது. மாலையில் சிறப்பு பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டில் இடங்களைத் தோ்வு செய்தவா்களுக்கு கல்லூரிகளில் சோ்வதற்கான சோ்க்கை ஆணைகளை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வழங்கவுள்ளாா். கலந்தாய்வு தொடா்பான மேலும் விவரங்களுக்கு சுகாதாரத் துறை இணையதளத்தைப் பாா்த்து தெரிந்துகொள்ளலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com