
தூய்மையான சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் 'தூய்மை மிஷன்' திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் விரைவில் தொடங்கிவைக்க இருக்கிறார்.
இத்தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்,
"நம் எதிர்கால சந்ததிக்கு தூய்மையான சுற்றுச்சூழலை அளித்திட, முதல்வர் மு.க. ஸ்டாலின் 'தூய்மை மிஷன்' திட்டத்தை தொடங்கி வைக்கவுள்ளார்கள்.
‘தூய்மை மிஷன்’ என்பது வெறும் கோஷம் அல்ல, நம் ஒவ்வொருவரின் சமூகப்பொறுப்பு. சுகாதாரமான உலகத்தை அமைப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் ஏற்க வேண்டிய வாழ்வியல் அங்கம்!
நம்முடைய உலகம் என்றும் நமக்கானதாக இருக்க, மக்கும் குப்பை - மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்குவோம். ‘தூய்மை மிஷன்’ தன் இலக்கை நோக்கி வெல்லட்டும்!" என்று பதிவிட்டுள்ளார்.
உதயநிதியின் இந்த பதிவைப் பகிர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,
"ஒரு நகரின் தூய்மை என்பதில் அரசுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் எவ்வளவு பொறுப்பு உள்ளதோ, அதே அளவு பொறுப்பு பொதுமக்களாகிய நமக்கும் உள்ளது!
யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும்.
வளர்ந்த நாடுகளுக்கு இணையாக நாமும் தூய்மையான சுற்றுப்புறங்களைப் பெற வேண்டுமென்றால், குப்பைகளைத் தரம் பிரித்து அதற்குரிய இடத்தில் போடும் குறைந்தபட்ச நாகரிகப் பண்பு இன்றியமையாதது.
விரைவில் தொடங்கப்படவுள்ள 'தூய்மை மிஷன்' திட்டத்தில் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.