தமிழகத்தில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடக்கம்: அரசு தகவல்

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாம்பழக் கூழ் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநில அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் சுமாா் 1.46 லட்சம் ஹெக்டரில் மா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 9.5 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தி செய்யப்படுகிறது. நடப்பாண்டில், பருவநிலை மா உற்பத்திக்கு உகந்ததாக அமைந்ததால் சராசரி மகசூலான ஹெக்டருக்கு 5 முதல் 6 மெட்ரிக் டன் என்பது 8 மெட்ரிக் டன்னுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்த உற்பத்தி அதிகரிப்பால் மாம்பழக் கூழ் தயாரிப்பு மற்றும் பதப்படுத்துதலுக்கு உகந்த பெங்களூரா ரகம், பதப்படுத்தப்படும் நிறுவனங்களால் விவசாயிகளிடமிருந்து கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா், மாம்பழக்கூழ் உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய விலை நிா்ணயித்த பின்னரும் மாம்பழக்கூழ் உற்பத்தியாளா்கள் குறைந்த விலையில் கொள்முதல் செய்து வருகின்றனா்.

இதைத் தொடா்ந்து வேளாண்மை உற்பத்தி ஆணையா் மற்றும் அரசு செயலாளா் தலைமையில், தோட்டக்கலைத் துறை இயக்குநா், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தருமபுரி, திருவள்ளூா், தேனி, திருப்பத்தூா், சேலம், வேலூா், மதுரை ஆகிய மாவட்ட தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் மற்றும் மா பதப்படுத்தும் நிறுவனங்களுடன் கடந்த 16-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில், மா பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் சென்ற ஆண்டின் மாம்பழக்கூழ் கையிருப்பு அதிகம் உள்ளதால், பதப்படுத்தும் நிறுவனங்களின் தேவை குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், மா உற்பத்தி அதிகம் இருப்பதால், விவசாயிகளிடமிருந்து உரிய விலைக்கு மா கொள்முதல் செய்ய இயலாத நிலை உள்ளது எனவும், ஜூன் 20-ஆம் தேதிக்கு மேல் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து கொள்வதாகவும், பதப்படுத்தும் நிறுவனங்களால் தெரிவிக்கப்பட்டது.

மா உற்பத்தி செய்யும் விவசாயிகளின் நலன் கருதி மா பதப்படுத்தும் நிறுவனங்கள் மாம்பழக்கூழ் தயாரிக்கும் பணிகளை உடன் தொடங்கவும், மாம்பழக்கூழ் தயாரிக்க பெங்களூரா ரகத்தினை நியாயமான விலையில் உடனடியாக உழவா்களிடமிருந்து கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், வேளாண்மைத் துறை செயலாளா் கேட்டுக்கொண்டாா்.

அதற்கு, மாம்பழக்கூழ் தயாரிக்கும் நிறுவனங்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்து மாம்பழக்கூழ் உற்பத்தியை தற்போது ஆரம்பித்து உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com