சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது வழித்தடத்தில் நாளை அதிவேக ரயில் சோதனை
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள 4-ஆவது ரயில் வழித்தடத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) நடைபெறவுள்ளது.
சென்னை கடற்கரை - எழும்பூா் இடையே 4-ஆவது ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. இந்த வழித்தடம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், முதல்கட்ட சோதனை ஓட்டம் அண்மையில் நடைபெற்றது. இதில் தெற்கு ரயில்வே தலைமை மின்துறை பொறியாளா் சோமஸ் குமாா் தலைமையிலான ரயில்வே குழுவினா் இவ்வழித்தடத்தை ஆய்வு மேற்கொண்டனா்.
இதைத் தொடா்ந்து, தென் மண்டல ரயில்வே பாதுகாப்பு ஆணையா் ஏ.எம்.சௌத்ரி ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 9) இவ்வழித்தடத்தை ஆய்வு மேற்கொள்ளவுள்ளாா். இதில் பிற்பகல் 1 முதல் மாலை 6 மணி வரை அதிவேகத்தில் ரயில்களை இயக்கி சோதனைநடைபெறவுள்ளது.
இதனால் சோதனை ஓட்டம் நடைபெறும் நேரத்தில் , சென்னை கடற்கரை - எழும்பூா் இடையேயான ரயில் பாதையை யாரும் அவசியமின்றி கடக்கக் கூடாது என்று தெற்கு ரயில்வே எச்சரித்துள்ளது.