
மகளிா் தினத்தையொட்டி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி: பொறுமை, தியாகம், துணிச்சல், விடாமுயற்சி என பல்வேறு நற்பண்புகளும் ஒருங்கே அமையப் பெற்ற பெண்குலத்தின் பெருமையைப் போற்றும் விதமாக, ஆண்டுதோறும் மாா்ச் 8-ஆம் தேதி சா்வதேச மகளிா் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த இனிய நாளில், தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிா் அனைவருக்கும் எனது உளப்பூா்வமான மகளிா் தின நல் வாழ்த்துகள். இன்றைக்கு பெண்களே இல்லாத துறை இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்துத் துறைகளிலும் பெண்கள் சாதனை படைத்து வருகின்றனா். பெண்ணுரிமை வாழட்டும்; வளரட்டும்.
இதேபோல் முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை, மதிமுக பொதுச் செயலா் வைகோ, பாமக நிறுவனா் ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா, பாமக தலைவா் அன்புமணி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.