

புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியில் ரமலான் பண்டிகையையொட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்புத் தொழுகை திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இந்த தொழுகையில் ஆயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொழுகையின் ஒரு அங்கமான நோன்பு பெருநாள் உரையை இமாம் உமர் நிகழ்த்தினார்.
ஈகைத் திருநாள் தொழுகைக்கு முன்னர் பித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம் 500 குடும்பங்களுக்கு (அரிசி, பருப்பு, எண்ணெய், நெய், சேமியா) தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டியினர் வழங்கினர்.
தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் இந்த தொழுகையில் கலந்து கொண்டனர். ரமலான் மாதத்தில் வைக்கப்படும் நோன்பு இறையச்சத்தை வளர்த்து கொள்வதற்கும் பொறுமை, தர்மம் போன்ற நற்குணங்களை தொடர்வதற்குமான பயிற்சியை தந்துள்ளதாக கூறுகின்றனர்.
காலை 7:15 மணிக்கு துவங்கி 7.45 மணிக்கு நிறைவடைந்த தொழுகைக்கு பிறகு இஸ்லாமிய மக்கள் ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
உற்றார், உறவினர் நண்பர்களோடு தங்கள் அன்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டு ரமலான் திருநாளை தவ்ஹீத் ஜமாஅத் கமிட்டியினர் கொண்டாடி மகிழ்ந்தனர்.
இதேபோல விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் பகுதிகளில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.