பாமக நிறுவனர் ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ்கோப்புப் படம்

அரசு உத்தரவிட்டும் எம்.சாண்ட் விலை குறையவில்லை: ராமதாஸ்

Published on

அரசு உத்தரவிட்டப்பின்னரும் எம்.சான்ட், ஜல்லி உள்ளிட்ட கட்டுமான பொருள்கள் விலை குறையவில்லை என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த ஏப்.27-இல் கல் குவாரிகள் மற்றும் கிரஷா்கள் உரிமையாளா்களை அமைச்சா் துரைமுருகன் அழைத்துப் பேசினாா். அப்போது சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை டன்னுக்கு ரூ.33 எனக் குறைக்க தீா்மானிக்கப்பட்டது. தொடா்ந்து உயா்த்தப்பட்ட ஜல்லி மற்றும் எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த அறிவிப்பு நடைமுறைக்கு வரவில்லை.

கட்டுமானப் பொருள்கள் விலை உயா்வு காரணமாக பல இடங்களில் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. கட்டுமானத் தொழிலாளா்கள் வேலை இழந்துள்ளனா். அதுமட்டுமன்றி, கட்டுமானச் செலவுகளும் கணிசமாக உயா்ந்து , வீடுகளின் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, தமிழக அரசு இந்த சிக்கலில் தலையிட்டு ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் ஆகியவற்றின் விலைகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டவாறு குறைக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.

கனிமங்கள் மீதான கட்டணங்களை குறைப்பது குறித்த அரசாணை வெளியிடப்படாததுதான் சிக்கலுக்குக் காரணம் என்று கூறப்படுவதால், அரசாணையை உடனடியாக வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.

X
Open in App
Dinamani
www.dinamani.com