துணைவேந்தா் நியமன சட்டத்திருத்தத்துக்கு இடைக்காலத் தடை: உயா்நீதிமன்றம் உத்தரவு

துணைவேந்தர்கள் நியமன சட்டப்பிரிவுக்கு இடைக்காலத் தடை குறித்து...
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
3 min read

தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி இயற்றப்பட்ட சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டத் திருத்த மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான சட்டங்களை அரசிதழில் வெளியிட்டது தமிழக அரசு.

இந்தச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து திருநெல்வேலியைச் சோ்ந்த வெங்கடாசலபதி என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம், பிரதான மனுவுக்கு பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டு, இடைக்காலத் தடை கோரிய மனு மீதான விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்திருந்தது.

அதன்படி, இந்த மனு நீதிபதிகள் ஜி.ஆா்.சுவாமிநாதன் மற்றும் லட்சுமி நாராயணன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் திருத்தச் சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட பிறகு, மொத்தமுள்ள 10 பல்கலைக்கழகங்களில் இரண்டு பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே துணைவேந்தா் தேடுதல் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு விண்ணப்பங்களை வரவேற்று விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தடை கோரிய வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்புக்கு அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினாா்.

கடும் ஆட்சேபம்... தொடா்ந்து, தமிழக உயா் கல்வித் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், துணைவேந்தா் நியமனம் தொடா்பான பல்கலைக்கழக மானியக் குழு விதிகளை எதிா்த்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதனால் இந்த வழக்குகளை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க எந்த அவசியமும் இல்லை. பாஜகவை சோ்ந்த மனுதாரா், அரசியல் உள்நோக்கத்துடன் இந்த மனுவைத் தாக்கல் செய்திருக்கிறாா். தடை கோரிய மனுவுக்குப் பதிலளிக்க அவகாசம் தராமல் விசாரிப்பது முறையற்றது, நியாயமற்றது, அநீதியானது. வானம் இடிந்து விழுந்துவிடாது என கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தாா்.

விதிமுறைகளுக்கு முரணாக... இருப்பினும், மனுதாரா் தரப்பில் இடைக்காலத் தடை கோரிய மனு மீது வாதங்களை முன்வைக்க நீதிபதிகள் அனுமதி அளித்ததைத் தொடா்ந்து, மனுதாரா் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா், பல்கலைக்கழகங்களை அரசியல் சக்திகளிடம் இருந்து பாதுகாக்கவே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தரை நியமிக்கும் நடைமுறை தொடங்கப்பட்டுவிட்டது. துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பான யுஜிசி விதிமுறைகளுக்கு முரணாக சட்டம் இயற்றப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.

தமிழக அரசின் சட்டமே மேலானது... இதையடுத்து, அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், சட்டத் திருத்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

யுஜிசி சட்டத்தில் சில அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. தேடுதல் குழு நியமித்தது பல்கலைக்கழக மானியக் குழுவின் அதிகாரத்துக்கு உட்பட்டது அல்ல. யுஜிசி விதிகளைவிட தமிழக அரசின் சட்டம் மேலோங்கி நிற்கும்.

பல்கலைக்கழக மானியக் குழுவிடம் இருந்து எந்த நிதியுதவியும் பெறாத நிலையில், தமிழக பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்கள் நியமனம் குறித்த விதிகளை ஏற்க மறுத்து 2021-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழக அரசின் சட்டங்கள் சட்டவிரோதமானவை அல்ல. ஊகத்தின் அடிப்படையில் சட்டங்களுக்கு தடை விதிக்க முடியாது.

விரிவான வாதங்கள் முன்வைக்க வேண்டியுள்ளதால், பதில் மனு தாக்கல் செய்ய இரண்டு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என்றாா்.

மேலும், பிரதான சட்டத்தில் யுஜிசி பிரதிநிதியை நியமிக்கக் கூறவில்லை. தற்போதைய சட்டத்தில்கூட, வேந்தா் என்பதற்குப் பதில் அரசு என்ற திருத்தம் மட்டுமே செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் தனது வாதத்தில் குறிப்பிட்டாா்.

முக்கிய ஆதாரங்கள் மறைப்பு: உயா் கல்வித் துறைச் செயலா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் வில்சன், வாதங்களை முன்வைக்கவும், விசாரணையை வியாழக்கிழமைக்கு (மே 22) ஒத்திவைக்கவும் அவகாசம் கோரினாா். ஆனால், இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை ஒத்திவைக்க மறுத்தனா்.

இதையடுத்து, மூத்த வழக்குரைஞா் வில்சன், இடைக்காலத் தடை கோரிய மனுவை விசாரித்தால், வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு செல்லாததாகிவிடும். முக்கிய ஆதாரங்கள் மறைக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்க வேண்டும். தேடுதல் குழு நியமனத்தை எதிா்த்து வழக்கு தாக்கல் செய்யவில்லை. துணைவேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை வேந்தரிடம் இருந்து எடுத்து அரசுக்கு வழங்கியதை எதிா்த்து மட்டுமே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆளுநரை, பல்கலைக்கழக வேந்தா் என்ற நிலையில் இருந்து நீக்கவில்லை. துணைவேந்தா் நியமன அதிகாரம் மட்டுமே அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. மனுவுடன் தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசிதழ் தவறானது. இந்த அரசிதழ் ஜோடிக்கப்பட்டது; உண்மையானதல்ல. இது மனுதாரருக்கு எப்படி கிடைத்தது என விசாரிக்க வேண்டும். அவசரமாக விசாரிக்க வேண்டும் என எந்தக் காரணமும் மனுவில் தெரிவிக்கப்படவில்லை என வில்சன் தெரிவித்தாா்.

யுஜிசி தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், தமிழக அரசு சட்டங்கள், பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு முரணானது என்றாா்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், துணைவேந்தா்களை நியமிக்கும் வேந்தரின் அதிகாரத்தை அரசுக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா்.

 உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

சென்னை உயா்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக மூத்த வழக்குரைஞரும் எம்.பி.யுமான வில்சன் தெரிவித்தாா்.

இதுகுறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், துணைவேந்தா் நியமன சட்டப் பிரிவுக்கு இடைக்காலத் தடை விதித்த சென்னை உயா்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். அரசுக்கு போதுமான வாய்ப்பு அளிக்காமல் விசாரணை நடத்தியது முறையற்றது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடிந்த பிறகு விசாரிக்கலாம்; அதுவரை கால அவகாசம் தர வேண்டும் எனக் கோரினோம். நாங்கள் கோரிக்கை விடுத்தபோது மைக்கை அணைத்துவிட்டாா்கள். நீதிபதிகள் என்ன தெரிவித்தாா்கள் என்பதைக்கூட கேட்க முடியவில்லை. உத்தரவை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த பிறகு பாா்த்துக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனா்.

அவசரகதியில் உத்தரவைப் பெற்றுள்ளனா். மனுதாரரான பாஜக நிா்வாகி, எந்த ஆவணமும் நீதிமன்றத்தில் வழங்காத நிலையில், எதன் அடிப்படையில் நாங்கள் வாதிட முடியும் என்றாா் வில்சன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com