/

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் மூவர் குழு

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :28 மே 2025, 9:33 pm

DIN

பெரியார் பல்கலைக்கழகத்தை வழிநடத்த ஏதுவாக ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் 3 பேர் கொண்ட நிர்வாகக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தின் 8-ஆவது துணைவேந்தராக இருந்த ரா.ஜெகந்நாதன் மே 19-ஆம் தேதி பணி நிறைவு பெற்றார். அவர் பல்கலைக்கழக பொறுப்புத் துணைவேந்தராக தமிழ்த் துறைத் தலைவர் தி.பெரியசாமியை நியமித்திருந்தார்.

ஆனால், ஆட்சிக் குழுவைக் கூட்டி முடிவு செய்யாமல் தன்னிச்சையாக பொறுப்பு துணைவேந்தரை நியமித்தது செல்லாது எனக் கூறி, பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் கடந்த ஒரு வாரமாக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம், முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே தமிழக அரசின் உத்தரவுபடி சிறப்பு ஆட்சிக் குழு கூட்டம் பெரியார் பல்கலைக்கழகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அரசின் அலுவல் சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 8 பேர் உள்பட 21 பேர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் அடுத்த துணைவேந்தரை அரசு நியமிக்கும் வரை பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை வழிநடத்தும் வகையில், நிர்வாகக் குழு அமைப்பது என முடிவு செய்யப்பட்டது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியும், கல்லூரிக் கல்வித் துறை இயக்குநருமான சுந்தரவள்ளி, குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், குழு உறுப்பினர்களாக பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ரா.சுப்பிரமணி, சக்தி கைலாஷ் மகளிர் கல்லூரி முதல்வரும் ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜெயந்தி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழு பல்கலைக்கழக நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்படுத்தும்.

புதிய நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு பதிவாளர் வி.ராஜ், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், பேராசிரியர்கள், நிர்வாக அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.