பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைப்பதற்காக அன்புமணியும் அவரது மனைவி செளமியாவும் தனது காலை பிடித்து அழுததாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக பாட்டாளி மக்கள் கட்சிக்குள் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணிக்கு இடையே நிலவி வந்த உள்கட்சிப் பூசல் தீவிரமடைந்துள்ளது.
கட்சியின் தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை அதிரடியாக நீக்கிய ராமதாஸ், அவரை செயல் தலைவராக நியமனம் செய்தார்.
இதனிடையே, கட்சியில் இருந்து பதவியிறக்கம் செய்தது குறித்து சமீபத்தில் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தைலாபுரத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை ராமதாஸ் முன்வைத்தார்.
அப்போது, 2024 மக்களவை தேர்தல் கூட்டணி குறித்து ராமதாஸ் பேசியதாவது:
”கட்சியின் நிர்வாக குழுவில் 19 பேர் உள்ளனர். அன்புமணி, அவர்களது கருத்தை கேட்பதும் இல்லை. கருத்தை வெளிப்படுத்தவும் அனுமதிப்பதில்லை.
2024 தேர்தலில் அதிமுக கூட்டணி வேண்டும் என்று விரும்பினேன். அன்புமணியும், எடப்பாடி பழனிசாமி இடம் பேசி கூட்டணியை உறுதி செய்திருந்தார். ஆனால், அன்புமணி மற்றும் சௌமியா இருவரும் திடீரென தைலாபுரம் வந்து பாஜக கூட்டணி தான் வேண்டும் என்று காலைப் பிடித்து அழுதனர்.
இருவரும் நீண்ட நேரம் அழுததால் என்னால் வேறு ஒன்றும் செய்ய இயலவில்லை.
உடனடியாக பாஜகவின் அண்ணாமலையுடன் பேச்சுவார்த்தை நடத்தி, மறுநாள் காலையில் என்னிடம் கேட்காமலேயே தைலாபுரத்துக்கு அண்ணாமலையை அன்புமணி அழைத்து வந்தார்.
அதிமுக-பாமக கூட்டணி என்பது இயல்பான கூட்டணி. இது அமைந்திருந்தால் பாமக 3, அதிமுக 7 இடங்களில் வென்றிருக்க கூடும்.
பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்றால் நீங்கள் தான் எனக்கு கொள்ளி போட வேண்டும் என்று அன்புமணி கூறினார்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.