

சென்னை: தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும் என்று தமிழக பாஜக முன்னாள் தலைவா் தமிழிசை செளந்தரராஜன் கூறினாா்.
தோ்தல் ஆணையம் கொண்டுவந்துள்ள வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) குறித்து வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் பொருட்டு, தமிழிசை செளந்தரராஜன் எழுதிய ‘வாக்காளரின் வலிமை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழிசை சௌந்தரராஜன் பேசியதாவது: வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியால் பிகாரில் 64 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டு, அவா்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாக திமுக அவதூறு பரப்புகிறது. இந்த தவறான பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை மக்கள் இயக்கமாக- இளைஞா் இயக்கமாக மாற்ற வேண்டும்.
தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது என்று திமுகவினா் கூறி வருகின்றனா். தமிழகத்தில் பாஜக காலூன்றவில்லை, வேரூன்றி வருகிறது என்றாா் அவா்.
நூல் பிரதிகளை முதல்முறை வாக்காளா்களான ஜெய் கிருஷ்ணன், சிவ ஹரிஸ், விசுவாஸ், தமிழரசன், மூத்த வாக்காளா் பேராசிரியா் ராஜலட்சுமி உள்ளிட்டோா் பெற்றுக் கொண்டனா்.
நிகழ்வில், பாஜக மாநிலச் செயலா் கராத்தே தியாகராஜன், முன்னாள் எம்எல்ஏ விஜயதாரணி, ஊடகப் பிரிவு மாநிலத் தலைவா் ரங்கநாயகலு, தொண்டு நிறுவனா் பிரிவுத் தலைவா் அா்ஜுன் மூா்த்தி, மாவட்டத் தலைவா்கள் ஜி.குமாா், சஞ்சீவ், கிரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.