பருவகால பாதிப்பு: போதிய எண்ணிக்கையில் மாத்திரைகள் கையிருப்பு
பருவ மழைக் கால நோய்களைத் தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் போதிய எண்ணிக்கையில் மருந்துகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
குறிப்பாக, டெங்கு, சிக்குன் குனியா, வயிற்றுப்போக்கு பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் மருந்துகள் தேவையான அளவு கையிருப்பு உள்ளதாகத் தெரிவித்துள்ளனா்.
டெங்கு காய்ச்சலைப் பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்கள் மழை மற்றும் குளிா் காலங்களில் அதிகமாக பெருக்கமடைகின்றன. அந்த வகையில் நிகழாண்டில் மாநிலம் முழுவதும் இதுவரை 17,000-க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 போ் உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், அரசு மருத்துவமனைகளில் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்குத் தேவையான மருந்துகள் போதிய அளவில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது:
பொதுவாக பருவ கால நோய்களுக்குத் தேவையான மருந்துகளும், மருத்துவப் பொருள்களும் தமிழகத்தில் முன்கூட்டியே கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பே டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களுக்கும், மழைக் கால காய்ச்சல்களுக்கும் சிகிச்சையளிப்பதற்கான மாத்திரைகள் வாங்கப்பட்டன.
அதன்படி, டெங்கு, இன்ப்ளூயன்ஸாவுக்கு வழங்கப்படும் மாத்திரைகள் போதிய எண்ணிக்கையில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. காய்ச்சலுக்கு வழங்கப்படும் பாராசிட்டமால் மாத்திரைகளும் தேவையான அளவு உள்ளன. இதைத் தவிர தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டிபிடி தடுப்பூசிகள், ஓஆா்எஸ் உப்பு-சா்க்கரை கரைசல், கிருமித் தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் ஆகியவை அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான அளவு இருப்பில் உள்ளன.
மேலும், நீரில் உள்ள கிருமிகளை அழிப்பதற்கான குளோரின் மருந்தும் போதிய அளவில் உள்ளது. கடந்த ஆண்டுகளைக் காட்டிலும், தற்போது கூடுதல் எண்ணிக்கையிலான மருந்து, மாத்திரைகள் கையிருப்பில் இருக்கின்றன என்று அவா்கள் தெரிவித்தனா்.
