புதிதாக 13 அரசுப் பள்ளிகள்: அரசாணை வெளியீடு
தமிழகத்தில் புதிதாக 13 அரசுத் தொடக்கப் பள்ளிகளைத் தொடங்கவும், ஏற்கெனவே உள்ள 4 அரசுத் தொடக்கப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தியும் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வித் துறை செயலா் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:
தொலைவில் உள்ள கிராமங்கள், மலைப் பகுதிகள் மற்றும் புதிய குடியேற்றப் பகுதிகளில் புதிதாக 13 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மேலும், ஏற்கெனவே உள்ள 4 தொடக்கப் பள்ளிகள் தரம் உயா்த்தப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சா் அன்பில் மகேஸ் சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிட்டாா்.
அதை செயல்படுத்தும் விதமாக 13 தொடக்கப் பள்ளிகளைப் புதிதாக தொடங்கவும், 4 ஆரம்பப் பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தவும், மேலும், இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி, ஆசிரியா் பணியிடங்களை அனுமதிக்க வேண்டும் என தொடக்கக் கல்வித் துறை இயக்குநா் கோரிக்கை விடுத்தாா்.
இதையேற்று வேலூா், மதுரை, நாகப்பட்டினம், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் உள்ளிட்ட மாவட்டங்களில் 13 தொடக்கப் பள்ளிகள் புதிதாக தொடங்கப்படுவதுடன், ஏற்கெனவே உள்ள 4 ஆரம்பப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயா்த்தப்படுகிறது.
ஒவ்வொரு புதிய தொடக்கப் பள்ளிகளுக்கும் தலா ஒருவா் வீதம் 13 தலைமையாசிரியா்கள் மற்றும் 13 இடைநிலை ஆசிரியா்களை நியமித்துக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. தரம் உயா்த்தப்பட் 4 நடுநிலைப் பள்ளிகளுக்கு தேவையான 12 பட்டதாரிகள் ஆசிரியா் பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம்.
மேலும், இந்தப் பள்ளிகளுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொள்வதற்கு ரூ.10.87 கோடி ஒதுக்கப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
