சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது வாக்காளர் படிவங்களை வழங்குவதில் ஆளுங்கட்சியினரின் தலையீட்டைத் தடுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் புதன்கிழமை அதிமுக சார்பில் மனு அளித்த பின்னர், ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறியது:
சிறப்பு தீவிர திருத்தப் பணியின்போது, வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவத்தை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்தான் வழங்க வேண்டும். பூர்த்தி செய்து மீண்டும் அவர்கள்தான் திரும்பப் பெற வேண்டும். ஆனால், பல மாவட்டங்களில் ஆளும் கட்சியினர் வாக்குச்சாவடி அலுவலர்களை மிரட்டி, அவர்களே வாக்காளர்களிடம் படிவங்களை வழங்குவதாகப் புகார் எழுந்துள்ளது.
அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அவர்களே படிவங்களை கொடுக்கக் கூடாது. இதனால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.
தமிழ்நாட்டில் எந்த வகையிலும் வாக்காளர்களை நீக்க முடியாது. எஸ்ஐஆர் மூலம் சிறுபான்மையினர் வாக்குகளை நீக்கிவிடுவர் என்பது தவறான கருத்து.
தவெக தலைமையில்தான் கூட்டணி, விஜய்தான் முதல்வர் வேட்பாளர் என அக்கட்சியினர் பேசியிருக்கலாம்.
அது அவர்களின் கருத்து. ஆனால் யார் முதல்வர் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பர். அதிமுக தலைமையில்தான் கூட்டணி இதுதான் எங்கள் கருத்து என்றார்.
இதேபோல காங்கிரஸ் தரப்பில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிர்ப்புத் தெரிவித்து தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.