பதிவுத் துறை உதவி ஐஜி பணி நியமன விவகாரம்: தமிழக அரசு விளக்கம்

பதிவுத் துறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் உதவி பதிவுத் துறை தலைவர் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
Published on
Updated on
1 min read

பதிவுத் துறையில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில்தான் உதவி பதிவுத் துறை தலைவர் பதவி உயர்வு மற்றும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்னதாக, பதிவுத் துறை உதவி தலைவர் பதவி உயர்வில் தமிழக அரசு சமூக அநீதி நிகழ்த்தியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டியிருந்தார். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, தமிழக பதிவுத் துறையால் வெளியிடப்பட்ட இந்தப் பதவி உயர்வு பட்டியலை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இளநிலை உதவியாளர், இரண்டாம் நிலை சார்-பதிவாளர், முதல் நிலை சார்-பதிவாளர், மாவட்ட பதிவாளர் ஆகிய பணிகளுக்கான ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்து, தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

பதிவுத் துறையின் நிர்வாக நலன்களைக் கருத்தில் கொண்டு, நடைமுறையில் உள்ள சட்டவிதிகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில், கடந்த அக்.31-ஆம் தேதி 30 தகுதி வாய்ந்த மாவட்டப் பதிவாளர்களை உள்ளடக்கிய கடந்த 2022-23-ஆம் ஆண்டுக்கான உதவி பதிவுத் துறை தலைவர் தற்காலிக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இடஒதுக்கீடு விதியை பின்பற்றி 1997-98 ஆண்டு முதலான 2-ஆம் நிலை சார் பதிவாளர் மற்றும் அதற்கு பின்னர் வெளியிடப்பட்ட உயர் பதவிகளுக்கான பட்டியல்களை திருத்தம் செய்ய ஆணையிடப்பட்டது.

அதன்படி, 2009-10 முதல் 2019-20 வரை மாவட்டப் பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் பட்டியல் இட ஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பட்டியலாக கடந்த ஆண்டு பிப்.2-ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அவ்வாறு திருத்தம் செய்யப்பட்ட பட்டியல்களில் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டவாறு இட ஒதுக்கீடு சரியான முறையில் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியிடப்பட்ட உதவி பதிவுத் துறை தலைவர் பட்டியலில் இடஒதுக்கீடு அடிப்படையிலான 131 பேர் அடங்கிய மாவட்டப் பதிவாளர் முதுநிலை பட்டியல் கருத்தில் கொள்ளப்பட்டது.

இந்த 131 பேரில் ஒரு சிலர், மாவட்டப் பதிவாளர் நிலையில் 2 ஆண்டுகள் பணி முடித்து தகுதிகாண் பருவம் நிறைவு செய்யாத நிலையில், உதவிப் பதிவுத் துறை தலைவர் தற்காலிக தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் சேர இவர்கள் பரிசீலிக்கப்படவில்லை. எனவே, மேற்படி முதுநிலை பட்டியலில் இடம்பெற்றுள்ள 131 பேரில் மாவட்ட பதிவாளர் பதவியில் தகுதிகாண் பருவம் நிறைவு செய்த மற்றும் ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இல்லாத தகுதி வாய்ந்த 30 பேரை உள்ளீடு செய்து உதவி பதிவுதுறைத் தலைவர் தற்காலிக தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது. எனவே, இப்பதவி உயர்வு பட்டியல் உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் அரசு விதிகளுக்கு உள்பட்டே வெளியிடப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com