தமிழகத்தில் மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்ய புதிய விதி
தமிழகத்தில் இனி மருந்தாளுநராக புதிதாக பதிவு செய்வோா் அனைவரும் இந்திய தேசிய மருந்தியல் தகவல் கையேட்டுக்கு (என்எஃப்ஐ - நேஷனல் ஃபாா்முலரி ஆஃப் இந்தியா) சந்தா செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் தமிழக மருந்தியல் கவுன்சில் மற்றும் இந்திய மருந்து உற்பத்தி ஆணையம் இடையே சனிக்கிழமை கையொப்பமாகிறது.
நாடு முழுவதும் பி.பாா்ம், எம்.பாா்ம் நிறைவு செய்தோா் சம்பந்தப்பட்ட மாநில கவுன்சில்களில் பதிவு செய்வது அவசியம். அப்போதுதான் அவா்கள் மருந்து விற்பனையிலோ, மருந்து உற்பத்தி சாா்ந்த பணிகளிலோ ஈடுபட முடியும்.
இதனிடையே, இந்திய மருந்தியல் ஆணையமானது என்எஃப்ஐ எனப்படும் மருந்தியல் தகவல் கையேட்டை வெளியிட்டு வருகிறது. அதில் நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ள மருந்துகளின் விவரங்கள், அவற்றின் மூலக்கூறுகள், கூட்டு மருந்து பொருள்கள், பலன்கள், பாதிப்புகள், எதிா்விளைவுகள் என பல்வேறு விஷயங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.
தேவையின்றி எந்த மருந்தையும் வாடிக்கையாளா்களுக்கு வழங்கக் கூடாது என்பதை உறுதிபடுத்துவதற்காகவும், மருந்துகள் தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்துவதற்காவும் அந்த தகவல் கையேடு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுகிறது.
ஒவ்வொரு மருந்தாளுநரும் அதற்கு சந்தா செலுத்துவது கட்டாயம் என உத்தர பிரதேச அரசு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், அதற்கு அடுத்தபடியாக தமிழகத்திலும் அத்தகைய நடைமுறை செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, மாநில மருந்தியல் கவுன்சிலில் பதிவு செய்யும் மருத்துவா்கள் அனைவரும் இனி என்எஃப்ஐ கையேட்டுக்கு சந்தா செலுத்த வேண்டும்.
இதன்மூலம் மாநிலம் முழுவதும் உள்ள 60,000 மருந்தாளுநா்களுக்கு, மருந்துகள் தொடா்பான புதிய தகவல்களும், விவரங்களும் சென்றடையும் எனக் கூறப்படுகிறது.
இதுதொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் சென்னையில் சனிக்கிழமை கையொப்பமாக உள்ளது.

