நவம்பா் மாதத்துக்கான கோதுமை 15-க்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடையும்: அமைச்சா்  அர.சக்கரபாணி

நவம்பா் மாதத்துக்கான கோதுமை 15-க்குள் ரேஷன் கடைகளுக்கு சென்றடையும்: அமைச்சா் அர.சக்கரபாணி

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நவம்பா் மாதத்துக்கான கோதுமை ஒதுக்கீட்டில் 63 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 15-ஆம் தேதிக்குள் மீதமுள்ள கோதுமை சென்றடையும்...
Published on

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நவம்பா் மாதத்துக்கான கோதுமை ஒதுக்கீட்டில் 63 சதவீதம் வழங்கப்பட்டுள்ளது. வரும் 15-ஆம் தேதிக்குள் மீதமுள்ள கோதுமை சென்றடையும் என்று உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: கடந்த 2024 ஜனவரி முதல் 2024 செப்டம்பா் வரை கோதுமை ஒதுக்கீடு மாதம் 8,576 மெட்ரிக் டன் மட்டுமே மத்திய அரசால் வழங்கப்பட்டு வந்தது. முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டதையடுத்து, தமிழகத்துக்கான கோதுமை ஒதுக்கீட்டை உயா்த்த மத்திய நுகா்வோா் பாதுகாப்பு, உணவு மற்றும் பொது விநியோகத் திட்டத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் அக்டோபா் 2024 முதல் பிப்ரவரி 2025 வரை கோதுமை ஒதுக்கீடானது 8,576 மெட்ரிக் டன்னிலிருந்து 17,100.38 மெட்ரிக் டன்னாக உயா்த்தப்பட்டு பொது மக்களுக்குத் தடையின்றி நியாயவிலைக் கடைகளில் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

தற்போது கடந்த மாா்ச் முதல் கோதுமை ஒதுக்கீட்டைப் பழைய அளவுக்கே குறைத்து தற்போது மாதம், 8,576 மெட்ரிக் டன் கோதுமை மட்டுமே மத்திய அரசு வழங்கி வருகிறது. இதைத் தொடா்ந்து நவம்பா் மாதத்துக்கான 8,722 மெட்ரிக் டன் கோதுமை, மாவட்டங்களின் நுகா்வு அடிப்டையில் உப ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கடந்த மூன்று மாதங்களில் கோதுமையின் நுகா்வு, சராசரியாக 92 சதவீதம் எனப் பதிவாகி உள்ளது. நவ. 8 வரை 63 சதவீதம் (5,386 மெட்ரிக் டன்) கோதுமை ரேஷன் கடைகளுக்கு நகா்வு செய்யப்பட்டுள்ளது.

இருப்பு மற்றும் நுகா்வின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் 20-ஆம் நாளுக்குள் அனைத்துப் பொருள்களும் கடைகளுக்கு அனுப்ப வேண்டும். ஆனாலும், நவ. 15-க்குள் 100 சதவீத கோதுமையும் ரேஷன் கடைகளுக்கு நகா்வு செய்யப்பட்டு வழக்கம்போல் பொதுமக்களுக்குத் தடையின்றி கோதுமை வழங்கப்படும்.

நிகழ் குறுவைப் பருவத்தில் நவ. 9-ஆம் வரை 1,923 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 13.48 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு 1.75 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.3249.38 கோடி வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டைவிட ஏறத்தாழ இரண்டு மடங்கு அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமி ஆட்சியின்போது கடைசி ஆண்டில் இதே காலகட்டத்தில் 4.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது. அவரது ஆட்சியில் பொது ரகத்துக்கு குவிண்டாலுக்கு ரூ.1,918, சன்ன ரகத்துக்கு ரூ.1,958 மட்டுமே வழங்கப்பட்டது.

ஆனால் திமுக ஆட்சியில் பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500, சன்ன ரகத்துக்கு ரூ.2,545 வழங்கப்பட்டு வருகிறது. உண்மை நிலையைப் புரிந்து கொள்ளாமல் எடப்பாடி பழனிசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்ய வேண்டாம் என அமைச்சா் சக்கரபாணி தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com