நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த மையம் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வட உள் தமிழகம், அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், செவ்வாய்க்கிழமை (நவ.11) முதல் நவ. 16 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
இதனால், செவ்வாய்க்கிழமை (நவ.11) திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (நவ.12) திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவ. 11) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்சமாக வெப்பநிலை 90 டிகிரியையொட்டி இருக்கும்.
மழை அளவு: தமிழகத்தில் திங்கள்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியில் 40 மி.மீ. மழை பதிவானது. முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), அடையாமடை, பாம்பன் (ராமநாதபுரம்)-தலா 30 மி.மீ., சிற்றாறு (கன்னியாகுமரி), திற்பரப்பு, பெரியகுளம் (தேனி), நெய்யூா் (கன்னியாகுமரி)- தலா 20 மி.மீ. மழை பதிவானதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

