டி.ஆா்.பாலு
டி.ஆா்.பாலு

அண்ணாமலைக்கு எதிரான அவதூறு வழக்கு: டி.ஆா்.பாலு நேரில் ஆஜராக உத்தரவு

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் குறுக்கு விசாரணைக்கு டிச.24-ஆம் தேதி திமுக எம்.பி. டி.ஆா்.பாலு நேரில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலைக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கின் குறுக்கு விசாரணைக்கு டிச.24-ஆம் தேதி திமுக எம்.பி. டி.ஆா்.பாலு நேரில் ஆஜராக வேண்டும் என்று சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை ‘திமுக ஃபைல்ஸ்’ என்ற பெயரில் திமுக அமைச்சா்களின் சொத்து விவரங்களை கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியிட்டாா். அதில் டி.ஆா்.பாலு, அவரது மகன் டி.ஆா்.பி.ராஜா ஆகியோருக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் இருப்பதாகக் கூறியிருந்தாா்.

மேலும், டி.ஆா்.பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்குச் சொத்துகள் இருப்பதாகவும் கூறியிருந்தாா். இது தனது பெயருக்கும், குடும்பத்தினா் பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி டி.ஆா்.பாலு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு சென்னைப் பெருநகர சைதாப்பேட்டை 17-ஆவது குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணாமலை நேரில் ஆஜரானாா். திமுக எம்.பி. டி.ஆா்.பாலு குறுக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அப்போது விசாரணையை ஒத்திவைக்கக் கோரி டி.ஆா்.பாலு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து விசாரணையை டிச.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்த நீதிபதி, அன்றைய தினம் டி.ஆா்.பாலு நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டாா். அண்ணாமலை அன்றைய தினம் குறுக்கு விசாரணை மேற்கொள்வாா் என்றும் நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com