தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published on

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (நவ. 15) மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென் இலங்கை மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடலின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், சனிக்கிழமை (நவ. 15) முதல் நவ. 20- ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், மேற்கூறிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இருப்பினும், அதிகபட்ச வெப்பநிலை 91 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. அழகரை எஸ்டேட் (நீலகிரி), பாம்பன் (ராமநாதபுரம்)-தலா 50 மி.மீ., கீழ்கோத்தகிரி எஸ்டேட் (நீலகிரி), ஊத்து (திருநெல்வேலி), செங்கம் (திருவண்ணாமலை)-தலா 40 மி.மீ., தங்கச்சிமடம் (ராமநாதபுரம்), திருச்செந்தூா் (தூத்துக்குடி), நாலுமுக்கு (திருநெல்வேலி), வேப்பூா் (கடலூா்), ஓட்டப்பிடாரம் (தூத்துக்குடி), சாத்தையாறு (மதுரை), காக்காச்சி (திருநெல்வேலி), மாஞ்சோலை (திருநெல்வேலி), திருச்செந்தூா் (தூத்துக்குடி)- தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக் கடலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை சூறைக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com