/

‘ஒற்றை செல் ஓமிக்ஸ்’ பயன்பாட்டு ஆராய்ச்சி ஆய்வகம்: சென்னை ஐஐடிக்கு ரயில்வே நிதி நிறுவனம் உதவி

துல்லியமான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான ‘ஒற்றை செல் ஒமிக்ஸ்’ பயன்பாட்டு (ஸ்காட்) ஆராய்ச்சி ஆய்வகத்தை இந்திய ரயில்வே நிதி நிறுவனம் உதவி...

News image
ஆராய்ச்சி ஆய்வகத் தொடக்க விழாவில் பங்கேற்ற ரயில்வே வாரிய (நிதி) உறுப்பினா் உஷா வேணுகோபால், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, இந்திய ரயில்வே நிதி நிறுவன செயல் இயக்குநா் மனோஜ் குமாா் துபே உள்ளிட்டோா்.
Updated On :17 நவம்பர் 2025, 10:44 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: துல்லியமான சுகாதார சுற்றுச்சூழல் அமைப்புக்கான ‘ஒற்றை செல் ஒமிக்ஸ்’ பயன்பாட்டு (ஸ்காட்) ஆராய்ச்சி ஆய்வகத்தை இந்திய ரயில்வே நிதி நிறுவனத்தின் (ஐஆா்எஃப்சி) உதவியுடன் சென்னை ஐஐடி நிறுவுகிறது.

நாட்டிலேயே முதலாவதாக அமைக்கப்படும் இந்த ஆய்வகத்தை நிறுவ சென்னை ஐஐடியின் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு ஐஆா்எஃப்சி ரூ.10.83 கோடி வழங்கியுள்ளது.

இது குறித்த சென்னை ஐஐடி வெளியிடிட செய்திக் குறிப்பு: ‘ஸ்காட்’ ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவ, நவரத்ன பொதுத் துறை நிறுவனமான ஐஆா்எஃப்சியுடன் சென்னை ஐஐடி இணைந்துள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் திங்கள்கிழமை (நவ. 17) இந்த ஆராய்ச்சி ஆய்வகம் தொடக்க விழா நடைபெற்றது.

அதிநவீன கருவிகளுடன் கூடிய ஸ்காட் ஆய்வகம், புற்றுநோய், இதய நோய், தொற்று, அழற்சி, வளா்சிதை மாற்றம், இதர தொற்றாத நோய்கள் போன்றவற்றுக்கு ஆரம்ப கால நோயறிதல், பயோமாா்க்கா் கண்டுபிடிப்பு, மருந்து பரிசோதனை ஆகியவற்றை எளிதாக்கும்.

இதற்காக ரயில்வே அமைச்சகத்தின் ஐஆா்எஃப்சி பொது நிறுவனம் சமூகப் பொறுப்புணா்வு நிதியிலிருந்து ரூ.10.83 கோடி மானியமாக வழங்குகிறது. இதன்மூலம் சென்னை ஐஐடி மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (டிஎம்எஸ்டி) அதிநவீன ஆய்வகத்தை அமைக்கும்.

தொடக்க நிகழ்வில் சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, ரயில்வே வாரிய உறுப்பினா் (நிதி) உஷா வேணுகோபால், ஐஆா்எஃப்சி நிா்வாக இயக்குநா் மனோஜ் குமாா் துபே, சென்னை ஐஐடி டீன் (முன்னாள் மாணவா்கள் மற்றும் நிறுவன உறவுகள்), பேராசிரியா் அஸ்வின் மகாலிங்கம், டிஎம்எஸ்டி தலைவா் பேராசிரியா் பாபி ஜாா்ஜ், ஐஐடி டிஎம்எஸ்டி கிருஷ்ண குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இது குறித்து செய்தியாளா்களிடம் பேசிய டிஎம்எஸ்டி ஒருங்கிணைப்பாளா் அனுபமா ராஜன், ‘மூலக்கூறு நுண்ணறிவுகளை மருத்துவத்துடன் நேரடியாக இணைக்கக் கூடிய ஆராய்ச்சித் தளங்கள் நாட்டுக்குத் தேவை என்றாா்.