

வார இறுதி விடுமுறை தினங்களையொட்டி,தமிழகத்தின்பல்வேறு பகுதிகளுக்கு வெள்ளி, சனி (நவ.21, 22) ஆகிய நாள்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்க அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வார இறுதி விடுமுறையையொட்டி, நவ.21, 22-இல் சென்னையில் இருந்து மற்ற இடங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கும் அதிகம் பேர் பயணம் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பயணிகளின் வசதிக்காக தினசரி இயக்கும் பேருந்துகளுடன் கூடுதல் சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.
கிளாம்பாக்கத்தில் இருந்து 690 பேருந்துகள்: சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை (நவ.21) 340 சிறப்புப் பேருந்துகளும், சனிக்கிழமை (நவ.22) 350 சிறப்புப் பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து 110 பேருந்துகள்: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனி (நவ.21, 22) ஆகிய நாள்களில் தலா 55 பேருந்துகள் என மொத்தம் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
மாதவரத்தில் இருந்து 40 பேருந்துகள்: மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வெள்ளி, சனி (நவ.21, 22) ஆகிய நாள்களில் தலா 20 பேருந்துகள் இயக்கப்படும். இதுதவிர, பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 100 சிறப்புப் பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல, வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.23) சொந்த ஊர்களில் இருந்து சென்னை, பெங்களூருக்கு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப தமிழகத்தின் அனைத்து ஊர்களில் இருந்தும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.