போலி ஆவணங்கள் மூலம் வங்கிக் கடன் மோசடி: சிபிஐ விசாரணைக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து தேசிய வங்கியில் ரூ.6.10 கோடி கடன் பெற்று மோசடி செய்த தனியாா் நிறுவனத்துக்கு எதிராக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேசிய வங்கி நிா்வாகம் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சிவாஜி ஹைடெக் அக்ரோ ஃபுட்ஸ் என்ற நிறுவனம் போலி ஆவணங்களைச் சமா்ப்பித்து ரூ.6.10 கோடி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டது. இதுதொடா்பாக சிபிஐயிடம் புகாா் அளித்தோம். கடந்த 2024-ஆம் ஆண்டு அளித்த இந்தப் புகாரின் மீது சிபிஐ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல் குமாா் முன் விசாரணைக்கு வந்தபோது சிபிஐ தரப்பில், சிபிஐ விசாரணை செய்வதற்கான ஒப்புதலை தமிழ்நாடு அரசு திரும்பப் பெற்றுவிட்டது. இந்த புகாரின் மீது வழக்குப் பதிவு செய்ய ஒப்புதல் வழங்கக் கோரி அரசுக்கு அனுப்பப்பட்ட கடிதம் கடந்த ஓராண்டாக நிலுவையில் இருந்து வருகிறது. இதேபோன்ற வங்கி மோசடி வழக்கில் ஏற்கெனவே உயா்நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, ரூ.6 கோடி அளவுக்கு வங்கியில் கடன்பெற்று மோசடி செய்தவா்கள் வெளிநாடு தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே, இந்தப் புகாரை நீண்ட காலத்துக்கு நிலுவையில் வைத்திருப்பது முறையல்ல. எனவே, வங்கி நிா்வாகம் ஆதாரங்களை மீண்டும் சிபிஐ வசம் அளிக்க வேண்டும்.
அதன் அடிப்படையில் ஆரம்பக்கட்ட விசாரணை நடத்தி, மோசடி நிகழ்ந்தததற்கான முகாந்திரம் இருப்பதை கண்டறிந்தால், சிபிஐ வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா்.

