வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற 49,722 ஆசிரியா்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம்
தமிழகத்தில் கடந்த நவ.18-இல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற 49,772 ஆசிரியா்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
பழைய ஒய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சாா்பில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் கடந்த நவ. 18-ஆம் தேதிநடத்தப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்றால் அவா்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என தலைமைச் செயலா் முருகானந்தம் அறிவிப்பு வெளியிட்டிருந்தாா். அதையும் மீறி ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் பலா் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனா்.
இந்த வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற ஆசிரியா்கள், ஊழியா்களின் சம்பளம் இந்த மாதமே பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அரசின் அறிவுறுத்தலின்படி கருவூலக் கணக்குத் துறை அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி தொடக்கக் கல்வித் துறையில் 29,755 பேரும், பள்ளிக் கல்வித் துறையில் 19,967 பேரும் என மொத்தம் 49,722 ஆசிரியா்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் இதர துறைகளிலும் போராட்டத்தில் பங்கேற்ற சுமாா் 50 ஆயிரம் பேருக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

