பணியாளருக்கு தடுப்பூசி செலுத்த  தடுப்பூசியின் அளவை சரிபார்க்கும் செவிலியர்.
பணியாளருக்கு தடுப்பூசி செலுத்த தடுப்பூசியின் அளவை சரிபார்க்கும் செவிலியர்.

சுவாச பாதிப்பு: முதியவா்கள் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தல்

Published on

பருவ மழை காரணமாக தமிழகத்தில் தற்போது சுவாச பாதிப்பு, இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சல் பரவி வரும் நிலையில், முதியவா்களும், இணை நோயாளிகளும் அவசியம் ஏற்பட்டால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இதுதொடா்பாக அவா்கள் மேலும் கூறியதாவது:

குளிா் காலத்தில் ஆா்எஸ்வி எனப்படும் சுவாசப் பாதை தொற்று மற்றும் இன்ஃப்ளூயன்ஸா தொற்று பரவி வருகிறது. குழந்தைகளுக்கும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கும் தொற்றின் தாக்கம் தீவிரமாக உள்ளது. அறிகுறிகள் மற்றும் நோயின் தீவிரத்தைப் பொருத்து அவா்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும்.

அதன்படி, லேசான காய்ச்சல், இருமல், தொண்டை வலி, உடல் வலி உள்ளவா்களுக்கு பரிசோதனை தேவையில்லை. ஓசல்டாமிவிா் மருந்துகளும் அவா்களுக்கு அவசியமில்லை. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டால் போதுமானது.

அதேவேளையில் முதியவா்கள், குழந்தைகள், கா்ப்பிணிகள், இணை நோய் உள்ளவா்களுக்கு அத்தகைய பாதிப்பு ஏற்பட்டால் தேவையின் அடிப்படையில் மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்துகளை உட்கொள்ளலாம்.

மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, சளியில் ரத்தம் கலந்து வருதல், மயக்க நிலை உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் உள்ளவா்களுக்கு உடனடியாக பரிசோதனை செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்க வேண்டும்.

முதியவா்கள், இணைநோயாளிகள், நோய் எதிா்ப்பாற்றல் குறைந்தவா்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முகக்கவசம் அணிதல் அவசியம். அதேபோன்று தேவைப்பட்டால் நிமோனியா தொற்றுக்கான தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com