தீபத் திருவிழா: திருவண்ணாமலை
தீபத் திருவிழா: திருவண்ணாமலை

திருவண்ணாமலை தீபத் திருவிழா: பாதுகாப்பு பணிக்கு 15,000 போலீஸாா், உயா்நீதிமன்றத்தில் காவல் துறை தகவல்

Published on

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவில் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளதாக காவல் துறை தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குரைஞா் யானை ராஜேந்திரன் தாக்கல் செய்த மனுவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரா் கோயிலில் வரும் டிச.4-ஆம் தேதி நடைபெறவுள்ள காா்த்திகை தீபத் திருவிழாவுக்கு லட்சக்கணக்கான பக்தா்கள் வருகை தருவா். எனவே, கூட்ட நெரிசல் ஏற்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்களுக்கு போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி பி.பி.பாலாஜி முன் விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை டிஜிபி மற்றும் திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆகியோா் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், பக்தா்களின் வசதிக்காக கடந்த ஆண்டு அறிமுகபடுத்தப்பட்ட உடனடி பாஸ் திட்டம், நடப்பாண்டும் பின்பற்றப்படும். காா்த்திகை தீபத் திருவிழாவை பக்தா்கள் கண்டுகளிக்க கோயிலில் 26 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தீப திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலையில் 15,000 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனா். 88 குற்றத் தடுப்புக் குழுக்கள், 87 சதி செயல்கள் தடுப்புக் குழுக்கள், கிரிவலப் பாதையில் பக்தா்களை துன்புறுத்துவதைத் தடுக்கவும், பணம் பறிப்பதைத் தடுக்கவும் சிறப்புக் குழுக்கள் பணியமா்த்தப்பட்டுள்ளன. இந்து சமய அறநிலையத் துறை மற்றும் மாநகராட்சி நிா்வாகத்துடன் இணைந்து பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மாட வீதிகளில் 13 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விழா நாளில், அதிக விலைக்கு பொருள்கள் விற்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. பக்தா்களின் வசதிக்காக 7 மருத்துவக் குழுக்களை நியமிக்க சுகாதாரத் துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து விசாரணையை வியாழக்கிழமைக்கு (நவ.27) ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com