
கரூர் சம்பவம் தமிழகத்தின் தலைகுனிவு; அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக தருமபுரியில் பிரசாரக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆர்ப்பாட்டம், பேரணி, பொதுக்கூட்டம் என்றால் பாதுகாப்பு கொடுப்பது காவல் துறையினர் கைகளில்தான் உள்ளது. தமிழகக் காவல் துறை முதல்வரின் நேரடிக் கட்டுப்பாடில் உள்ளது. அவ்வாறு பாதுகாப்பு கொடுத்திருந்தால் கரூரில் 41 பேரை இழந்திருக்க மாட்டோம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தை தலைக்குனியவிட மாட்டேன் எனக் கூறினார். ஆனால், நாடே இன்று தலைக்குனிந்து விட்டதாக தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்க்கிறோம். இந்தச் சம்பவத்தால் தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய நாடே அதிர்ந்துபோய் இருக்கிறது.
எந்தவொரு பொதுக்கூட்டத்திலும் இல்லாதவாறு இவ்வளவு மக்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்றாலும், ஆட்சி உங்கள் கைகளில்தான் இருக்கிறது. உங்களைப் பார்த்துதானே கேட்க வேண்டும். ஆனால், யார் மீதும் பழி சுமத்திவிட்டு நீங்கள் தப்பிச் சென்றுவிட முடியாது.
துணை முதல்வர் கரூருக்கு வந்து பார்த்துவிட்டு உடனே மீண்டும் சுற்றுலாவுக்கு சென்றுவிட்டார்; கரூரில் பெரிய துயரச் சம்பவம் நடந்த நிலையில் துணை முதல்வர் எங்கே போனார்? கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஏன் பதறுகிறார்; அவர் கண்ணில் பயம் தெரிகிறது.
இன்று ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி; எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்று ஆகிவிட்டது. முதல்வர் ஸ்டாலின் கூடும் இடங்களில் அதிக பாதுகாப்பு வழங்கப்படும் நிலையில், மற்ற கட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படுவதில்லை.
அரசியல் கட்சி கூட்டங்களுக்கு பாகுபாடு இன்றி உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது. போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது.
திமுகவின் கூட்டணி கட்சிகள் அவர்களுக்கு ஜால்ரா போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி தூபம் போடுவதை விசிக தலைவர் திருமாவளவன் நிறுத்திக்கொள்ள வேண்டும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் கரூரில் தவறு செய்த அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.