
ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண் பயணியை ரயில்வே பாதுகாப்பு படை காவலர் பத்திரமாக மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் சாமே தேவி (50). வேலூரில் தங்கியுள்ள இவர் தனது சொந்த ஊருக்குச் செல்வதற்காக நேற்று (02.10.2025) காட்பாடி இரயில் நிலையத்துக்கு சென்றுள்ளார்.
அப்போது கோவையில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயில் புறப்படும் நேரத்தில் தனது மகன் உதவியுடன் ஏற முயன்றுள்ளார். ஆனால் அவர் ஓடும் இரயிலுக்கும் - நடைமேடைக்கும் இடையில் விழும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனை கண்ட ரயில்வே பாதுகாப்பு படை காவலர் ஆதித்யா குமார் விரைவாக செயல்பட்டு அந்தப் பெண் கீழே விழாமல் சிறிது தூரம் அந்த பெண்ணை பிடித்தபடி ஓடிச் சென்று மீட்டுள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக காவலர் ஆதித்யா குமார் ரயில் பெட்டிக்கும் நடைமேடைக்கும் இடையே சிக்கி உள்ளார்.
இதனைக் கண்ட பயணிகள் அபாய சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்திய நிலையில் சக ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் மற்றும் பயணிகளின் உதவியோடு காவலர் மீட்கப்பட்டுள்ளார். இதில் பெண் பயணி மற்றும் காவலருக்கு சிறிய காயம் ஏற்பட்டதோடு இருவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.