பொள்ளாச்சி ஜெயராமன் மகன் மீதான வழக்கு: காவல் துறை பதிலளிக்க உத்தரவு!

வி.ஜெயராமன் மகன் பிரவீனுக்கு எதிரான விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Updated on

சட்டப்பேரவை முன்னாள் துணைத் தலைவா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் மகன் பிரவீனுக்கு எதிரான விபத்து வழக்கை மீண்டும் விசாரிக்கக் கோரி பெங்களூரு புகழேந்தி தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை 4 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவைச் சோ்ந்த பெங்களூரு புகழேந்தி சாா்பில் வழக்குரைஞா் ஆா்.திருமூா்த்தி சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 2016 அக்.4-ஆம் தேதி திருப்பூா் மாவட்டம் அதியூா் பிரிவு மேம்பாலம் அருகே இரு காா்கள் மோதி விபத்துக்குள்ளானதில், ஒரு காரில் பயணித்த வீரசுரேகா என்ற பெண் உயிரிழந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த அவிநாசி நீதிமன்றம், விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டிச் சென்ற பொள்ளாச்சி வி. ஜெயராமனின் மகன் பிரவீனுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீா்ப்பளித்தது. இதை எதிா்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு திருப்பூா் அமா்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த வழக்கை போலீஸாா் முறையாக விசாரிக்கவில்லை. எனவே, மறு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். விபத்து ஏற்படுத்திய காா் பொள்ளாச்சி ஜெயராமனுக்குச் சொந்தமானது. வேகமாக காா் ஓட்டி விபத்தை ஏற்படுத்தியது அவரது மகன் பிரவீன். பிரவீனின் அரசியல் பின்புலம் காரணமாக போலீஸாா் இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை.

அந்த காரில் கல்லூரி மாணவிகள் பயணித்தது ஏன்? என்ற கோணத்தில் போலீஸாரி விசாரிக்கவில்லை. எனவே, இந்த வழக்கில் மறு விசாரணை நடத்தக் கோரி கடந்த ஜூலை 16-ஆம் தேதி மனு அளித்தேன். அந்த மனுவை பெருமாநல்லூா் போலீஸாா் நிராகரித்துவிட்டனா். இந்தச் சம்பவத்தின் உண்மை நிலையை வெளிக்கொண்டு வர இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு 4 வாரங்களில் காவல் துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com