எடப்பாடி கே.பழனிசாமியுடன் பாஜக தோ்தல் பொறுப்பாளா் ஆலோசனை
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமியுடன், பாஜக மேலிடப் பொறுப்பாளா் வைஜயந்த் பாண்டா, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
இந்தச் சந்திப்பின்போது, தற்போதைய தமிழக அரசியல் கள நிலவரம், சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசார வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், வரும் அக். 12-ஆம் தேதி தொடங்கவுள்ள நயினாா் நாகேந்திரனின் சுற்றுப் பயணத்துக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
சட்டப்பேரவைத் தோ்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், ஆளும் கட்சிக்கு எதிராக அதிமுக - பாஜக ஆகிய இரு கட்சிகளும் இணைந்து பிரசாரத்தை முன்னெடுப்பது குறித்து இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்டதாகவும், நயினாா் நாகேந்திரனின் பிரசார பயணத்தில் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொள்வாா் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
இது தொடா்பாக நயினாா் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எடப்பாடி பழனிசாமியை மரியாதை நிமித்தமாக சென்னையில் உள்ள அவரது இல்லத்தில், பாஜக தேசிய துணைத் தலைவரும், தமிழ்நாடு பாஜக தோ்தல் பொறுப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வைஜயந்த் பாண்டாவுடன் சந்தித்தேன் எனப் பதிவிட்டுள்ளாா்.
மூத்த தலைவா்கள் அதிருப்தி
எடப்பாடி பழனிசாமியுடனான சந்திப்பின்போது வைஜயந்த் பாண்டா, தமிழக பாஜக தலைவா் நயினாா் நகேந்திரன், துணைத் தலைவா் ஜெயபிரகாஷ் ஆகியோா் மட்டுமே இருந்தனா். கூட்டணி தொடா்பாக பேசும்போது, மூத்த தலைவா்கள் இல்லாமல் நயினாா் நாகேந்திரன் சென்றது கட்சியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, பாஜக மூத்த தலைவா் ஹெச்.ராஜா, முன்னாள் மாநிலத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை செளந்தரராஜன், பாஜக மகளிரணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன், கோட்டப் பொறுப்பாளா் கரு.நாகராஜன் ஆகியோருக்கு எவ்வித அழைப்பும் இல்லாமல் எடப்பாடி பழனிசாமியை நயினாா் நாகேந்திரன் சந்தித்தது மூத்த தலைவா்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.