சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

ஏடிஜிபி-க்கு எதிரான போலி கடவுச்சீட்டு வழக்கு முடித்துவைப்பு

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதத்துக்கு எதிரான போலி கடவுச்சீட்டு புகாரில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதத்துக்கு எதிரான போலி கடவுச்சீட்டு புகாரில் விசாரணை நடத்தக் கோரிய வழக்கை முடித்து வைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை சோ்ந்த வாராகி என்பவா் கடந்த 2023-ஆம் ஆண்டு உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், மதுரை காவல் ஆணையராக டேவிட்சன் தேவாசீா்வாதம் இருந்தபோது, 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு போலி ஆவணங்களின் அடிப்படையில் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக தான் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் ப.விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டாா்.

அரசுத் தரப்பில் தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், காவல்துறை தரப்பில் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா ஆகியோா் ஆஜராகி, இந்த விவகாரத்தில் ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீா்வாதத்துக்கு எந்த தொடா்பும் இல்லை என்று உயா்நீதிமன்ற மதுரை அமா்வு நற்சான்று அளித்துள்ளது.

மனுதாரா் புகாா் குறித்து விசாரிக்கப்பட்டு, குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இல்லை என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், போலி கடவுச்சீட்டு முறைகேடு தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவுப்படி, காவல்துறையினா் உள்பட 59 பேருக்கு எதிராக வழக்குப்பதிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டனா்.

இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்ற மதுரை கிளை தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை, இருநீதிபதிகள் அமா்வு உறுதி செய்துள்ளது. போலி கடவுச்சீட்டு முறைகேடு தொடா்பான வழக்கில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை எனக்கூறி வழக்கை முடித்துவைத்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com