ஆளுநருடன் தமிழக அரசு 4 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிகழ்வில் பேசிய அவர்,
"தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் ஒருவர், இரு நாள்களுக்கு முன்னர் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். அவர் ஆளுநர் ஆர்.என். ரவி.
'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்று நாம் சொன்னால் 'நீங்கள் யாருடன் போராடப் போகிறீர்கள்? யாரை வெல்லப் போகிறீர்கள்?' என்று ஆளுநர் கேட்கிறார்.
4 ஆண்டுகளாக தமிழக அரசு உங்களுடன்(ஆளுநர் ஆர்.என். ரவி)தான் போராடிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்நாடு உங்களுடன் போராடும், வென்று காட்டும்.
சட்டப்பேரவையில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு கோப்புகளிலும் சட்டபூர்வமாக ஆளுநரின் கையெழுத்து பெற்று வருகிறார் முதல்வர்.
எடப்பாடி பழனிசாமி மாதிரி முதல்வரும் அடிமையாக இருப்பார் என்று ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் திமுக இருக்கும்வரை அநீதிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும். பாசிச சக்திகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று பேசியுள்ளார்.
இதுபற்றி உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில்,
முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தீரர் கோட்டமாம் திருச்சியில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.
எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று உரையாற்றினோம்.
தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!" என்று பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.