
சென்னையில் 2 ஆம் கட்ட மெட்ரோ பணி நடைபெறும் ரயில் நிலையங்களில் நுழைவு, வெளியேறும் கட்டமைப்புகளைக் கட்டுவதற்கு தனியார் நிறுவனத்துடன் ரூ. 250 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
கந்தன்சாவடி, பெருங்குடி உள்பட உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், இரண்டாம் கட்டத்தின் வழித்தடம் 3-இல் உள்ள நேரு நகர், கந்தன்சாவடி, பெருங்குடி, துரைப்பாக்கம், மேட்டுக்குப்பம், பிடிசி காலனி, ஒக்கியம்பேட்டை, காரப்பாக்கம் மற்றும் ஒக்கியம் துரைப்பாக்கம் ஆகிய உயர்மட்ட மெட்ரோ இரயில் நிலையங்களில் 17 நுழைவு/வெளியேறும் கட்டமைப்புகளை வடிவமைத்து கட்டுவதற்கான ஒப்பந்தத்தை பிரிட்ஜ் அண்ட் ரூஃப் (Bridge and Roof Company India Limited) நிறுவனத்திற்கு ரூ.250.47 கோடி (ஜிஎஸ்டி உட்பட) மதிப்பில் வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்தில், கட்டுமானப் பணிகள், நிலையத்தின் வடிவமைப்பு அலங்கார வேலைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய அனைத்து பணிகளும் அடங்கும்.
மேலும், மெட்ரோ இரயில் நிலையங்களின் பெரும்பாலான நுழைவு/வெளியேறும் இடங்களில், பயணிகள் பயன்படுத்தும் வகையில் கடைகள், வணிக வளாகங்கள் போன்ற போக்குவரத்தை மையப்படுத்திய பிரத்யேக சொத்து மேம்பாட்டு இடங்களை உருவாக்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் பயணச்சீட்டு வருவாயை தவிர்த்து, கூடுதல் வருவாயை (Non-Farebox Revenue) ஈட்ட முடியும்.
சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மு.அ.சித்திக் இ.ஆ.ப., முன்னிலையில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் தி.அர்ச்சுனன் மற்றும் தனியார் நிறுவனத்தின் சார்பாக பொது மேலாளர் .ரவி ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்நிகழ்வில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவன ஒப்பந்ததாரர்கள், நிறுவனத்தின் உயர் அலுவர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.