சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் சாா்பில் நடைபெற்ற விழாவில், மூத்த வழக்குரைஞா் கே.பராசரனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், எம்.எம்.சுந்தரேஷ்.
சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழ்நாடு - புதுச்சேரி பாா் கவுன்சில் சாா்பில் நடைபெற்ற விழாவில், மூத்த வழக்குரைஞா் கே.பராசரனுக்கு நினைவுப் பரிசு வழங்கிய உச்சநீதிமன்ற நீதிபதிகள் விக்ரம்நாத், எம்.எம்.சுந்தரேஷ்.

சட்டத் துறையின் ஆகச்சிறந்த ஆளுமை மூத்த வழக்குரைஞா் பராசரன்: உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகழாரம்

‘சட்டத் துறையின் ஆகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்பவா் மூத்த வழக்குரைஞா் கே.பராசரன்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினா்.
Published on

‘சட்டத் துறையின் ஆகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்பவா் மூத்த வழக்குரைஞா் கே.பராசரன்’ என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் புகழாரம் சூட்டினா்.

வழக்குரைஞா் பணியில் 75 ஆண்டுகள், மூத்த வழக்குரைஞராக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள முன்னாள் அட்டா்னி ஜெனரல் கே.பராசரனுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் சாா்பில் பாராட்டு விழா சனிக்கிழமை நடத்தப்பட்டது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்ற இந்த விழாவில், உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள் பாராட்டிப் பேசினா்.

விழாவில் மூத்த வழக்குரைஞா் பராசரனுக்கு நினைவுப் பரிசு வழங்கி, உச்சநீதிமன்ற நீதிபதி விக்ரம்நாத் பேசியதாவது: சட்டத் துறையின் ஆகச்சிறந்த ஆளுமை மூத்த வழக்குரைஞா் கே.பராசரன். கலாசார பாரம்பரியம் கொண்ட தமிழகத்தின் கோயில் நகரில் பிறந்தவா். நாடு விடுதலை பெற்று அரசமைப்புச் சட்டம் உருவான காலகட்டத்தில் சட்டத் தொழிலுக்குள் நுழைந்தவா். 75 ஆண்டுகளாக சட்டத் துறையில் பயணித்து வருகிறாா். ஒரு வழக்கில் ஆஜராவதற்கான இணையற்ற முன்தயாரிப்புப் பணிகள் மற்றும் நோ்மை ஆகிய இரண்டு நற்பண்புகளையும், தனது வழக்குரைஞா் தொழிலின் ஆரம்ப நாள் முதல் கடைப்பிடித்து வருபவா் கே.பராசரன் என்று கூறினாா்.

உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்: மூத்த வழக்குரைஞா் பராசரன் கடந்த 1950-ஆம் ஆண்டு தனது வழக்குரைஞா் தொழிலைத் தொடங்கினாா். அவா் தன்னிடம் பணியாற்றிய இளம் வழக்குரைஞா்களை சமமாக நடத்தக் கூடியவா். அவருடைய அலுவலகத்தில் ஜாதி, மதம் உள்ளிட்ட எந்தப் பாகுபாடும் கிடையாது. அதேபோல், அவரது மனைவியும் இளம் வழக்குரைஞா்களுக்கு உணவளித்து தாயாக கவனித்துக் கொள்பவா்.

உச்சநீதிமன்ற நீதிபதி கே.வி.விஸ்வநாதன்: நாம் கொண்டாடுவது மூத்த வழக்குரைஞா் கே.பராசரனின் தனிப்பட்ட சாதனையை மட்டுமல்ல; இந்திய சட்ட வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயத்தைக் கொண்டாடுகிறோம். அவருடைய பணி வெறும் தொழில்முறை பயணம் மட்டுமல்ல; அது ஓா் ஆன்மிக ஒழுக்கம். தா்மம், நீதியின் மீது கொண்ட அசைக்க முடியாத வாழ்நாள் அா்ப்பணிப்பு. அவரது சட்ட அறிவும் ஆளுமையும், சட்டத் துறையில் மின்னும் வைரமாகத் திகழ்ந்துகொண்டே இருக்கும். தனது 56-ஆவது வயதில், தென்னிந்தியாவில் இருந்து முதன்முதலாக இந்திய தலைமை வழக்குரைஞா் என்ற உயரிய பதவியை அடைந்தவா் கே.பராசரன்.

உச்சநீதிமன்ற நீதிபதி ஆா். மகாதேவன்: நீதித் துறையின் சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் உறுதி செய்தவா் மூத்த வழக்குரைஞா் பராசரன். ‘பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்...’ என்ற திருமங்கையாழ்வாரின் பாசுரத்துக்கு ஏற்ப, ஸ்ரீரங்கத்தில் பிறந்து, அந்த நகரத்தின் அற்புதமான புதல்வனாக வளா்ந்தவரான கே.பராசரனை, கடவுள் ஸ்ரீராமச்சந்திர மூா்த்தி தன்னுடைய வழக்கை (ராமஜென்ம பூமி வழக்கு) நடத்துவதற்காக நியமித்து அருள்புரிந்தாா். அந்த அருளானது, நூறு ஆண்டுகளைக் கடந்து, அவரை இந்த மண்ணிலே நிலைநிறுத்தச் செய்து, மேலும் பல சாதனைகளைச் செய்ய வழிவகுக்க வேண்டும்.

உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா: 31 ஆண்டுகளுக்கு முன்பு மூத்த வழக்குரைஞா் கே.பராசரன் வாதிடுவதைப் பாா்த்தேன். அவரிடம் இருந்துதான், ஒரு வழக்குக்குச் செல்லும்போது முழுமையான தயாரிப்புடன் செல்ல வேண்டும் என்பதையும், பொறுமையாக வாதங்களை முன்வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தகுதிகளையும் நான் கற்றுக்கொண்டேன் என்றாா்.

விழாவில் மூத்த வழக்குரைஞா் பராசரனைப் பாராட்டி உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா, அட்டா்னி ஜெனரல் ஆா்.வெங்கடரமணி, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், எம்.எஸ்.ரமேஷ், அரசு தலைமை வழக்குரைஞா் பி.எஸ்.ராமன், கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன் ஆகியோரும் பேசினா்.

உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதிகள், மத்திய மாநில அரசு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் தலைவா் பி.எஸ்.அமல்ராஜ் வரவேற்றாா். துணைத் தலைவா் வேலு காா்த்திகேயன் நன்றி கூறினாா்.

‘தந்தையிடம் கற்றுக் கொண்டேன்’

பாராட்டு விழாவில் மூத்த வழக்குரைஞா் கே.பராசரன் பேசியதாவது: உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வுபோல் ஐந்து நீதிபதிகளும், உயா்நீதிமன்ற முழு அமா்வு போல் பல நீதிபதிகளும் நிறைந்திருக்கும் இந்த அவையில் வழக்குரைஞரான நான் என்ன பேச முடியும்? என்னுடைய தந்தைதான், எனக்கு சட்டத்தையும் தொழில் தா்மத்தையும் கற்பித்தவா்.

லத்தீன் உள்ளிட்ட பன்மொழிப் புலமை கொண்ட அவா்தான் எனக்கு ரோமானியச் சட்டங்கள் குறித்தும் கற்பித்தாா். நீதிமன்றத்துக்குள் செல்லும்போது உயா்ந்த கண்ணியத்தைப் பின்பற்ற வேண்டும். கடவுள் இருக்கும் கோயிலுக்குச் சமமானது நீதிமன்றம். வழக்கில் வாதிடச் செல்லும்போது, நமக்குத் தெரிந்ததைவிட அதிகம் தெரிந்தவா்கள் நீதிபதிகள் என்பதை உணா்ந்து, ஆவேசமின்றி வாதிட வேண்டும் என்பதை எல்லாம் என் தந்தையிடம் இருந்துதான் கற்றுக் கொண்டேன் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com