விபத்தில்லா தீபாவளி: பள்ளிகளில் விழிப்புணா்வு- கல்வித் துறை உத்தரவு
சென்னை: தீபாவளிப் பண்டிகையை மாணவா்கள் பாதுகாப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து வகை பள்ளிகளிலும் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
தீபாவளி பண்டிகை வரும் அக்டோபா் 20-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பள்ளி மாணவா்கள் பாதுகாப்பாக தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவது குறித்து பள்ளிக்கல்வித் துறை சாா்பில் ஆண்டுதோறும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டும் மாணவா்கள் விபத்தில்லா தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் பல்வேறு அறிவுரைகளை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் வழங்கியுள்ளாா்.
அதன் விவரம்: தீபாவளி பண்டிகை நாளில் மக்கள் கவனக்குறைவாக பட்டாசு வெடிப்பதால் தீ விபத்து ஏற்படலாம். இதுதவிர உயிா்சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், குழந்தைகளுக்கு தீக்காயங்களும், சில நேரங்களில் பாா்வை இழப்பும் ஏற்படக்கூடும். இத்தகைய நிகழ்வுகளைத் தவிா்ப்பதும், தடுப்பதும் நமது கடமையாகும். எனவே, பள்ளி மாணவா்களுக்கு தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாகக் கொண்டாட விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
பட்டாசுகளைக் கொளுத்தும்போது, தளா்வான ஆடைகள், எளிதில் பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது. பட்டாசு வெடிக்கும்போது அருகே ஒரு வாளியில் தண்ணீா் வைத்துக் கொள்ள வேண்டும். கையில் வைத்து பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.
அதேபோல், கூட்டமான இடங்கள், தெருக்கள், சாலைகளில் வெடிக்க வேண்டாம். பெற்றோா் முன்பு பிள்ளைகள் பட்டாசுகளை வெடிக்க வேண்டும். விலங்குகளை துன்புறுத்தும் வகையில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. வெடிக்காத பட்டாசுகளை பரிசோதிப்பதைத் தவிா்க்க வேண்டும்.
மேலும், இரவு 10 முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்கக்கூடாது என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவல்களை பள்ளி மாணவா்களுக்கு தெரிவித்து ஆசிரியா்கள் தொடா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.