
தமிழகத்தின் 12 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.15) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வடகிழக்கு பருவ மழை அக்.16-ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்த நிலையில், தென்மேற்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் குமரிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.
இதன் காரணமாக, அக். 19-ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் கேரள கர்நாடக பகுதிகளுக்கு அருகே காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இதன் காரணமாக புதன்கிழமை (அக்.15) முதல் அக்.20 வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
பலத்த மழை எச்சரிக்கை: கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக்.15) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தொடர்ந்து, வியாழக்கிழமை (அக்.16) கோவை மாவட்ட த்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், தேனி, தென்காசி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.