ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி ஓராண்டுக்கு மேல் சிறையில் இருந்து வரும் சிவா மற்றும் சதீஷ்குமார் ஆகிய இருவருக்கு நிபந்தனை பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ரெüடி நாகேந்திரன் அவருடைய மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நாகேந்திரன் அண்மையில் உயிரிழந்தார். இதையடுத்து அவரது மகனுக்கு இடைக்கால பிணை வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கில் ஓராண்டுக்கு மேல் சிறையில் இருப்பதால், தங்களுக்கு பிணை வழங்கக் கோரி சதீஷ்குமார், ஹரிஹரன், சிவா ஆகியோர் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி கார்த்திகேயன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை இதே நீதிமன்றத்தில் அனைத்து வேலை நாள்களிலும் காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும். சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். சாட்சிகளைக் கலைக்கக் கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன், சிவா, சதீஷ்குமார் ஆகிய இருவருக்கும் பிணை வழங்கி உத்தரவிட்டார். ஹரிஹரன் மனு மீதான விசாரணையை அக்.17-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
அஸ்வத்தாமனுக்கு பிணை நீட்டிப்பு: தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமனுக்கு அக்.13-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கப்பட்டிருந்தது. அதன்படி திங்கள்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலையான அஸ்வத்தாமன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
தனது தந்தையின் காரியம் உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க 15 நாள் இடைக்கால பிணை கோரி அஸ்வத்தாமன் தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், அஸ்வத்தாமனுக்கு அக்.28-ஆம் தேதி வரை இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.