தவெக நிர்வாகிகள் இருவரை இன்று மீண்டும் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவு

கரூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரையும் புதன்கிழமை (அக்.15) மீண்டும் ஆஜர்படுத்த கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
Published on
Updated on
1 min read

கரூர் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தவெக நிர்வாகிகள் இருவரையும் புதன்கிழமை (அக்.15) மீண்டும் ஆஜர்படுத்த கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கரூர் பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக தவெக கரூர் மேற்கு மாவட்டச் செயலர் வி.பி.மதியழகன், கட்சி நிர்வாகி பௌன்ராஜ் ஆகியோரை தனிப்படை போலீஸார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதையடுத்து கரூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அக்.8-ஆம் தேதி பௌன்ராஜ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை நீதிபதி இளவழகன் தள்ளுபடி செய்தார். இதேபோல மதியழகன் தாக்கல் செய்த ஜாமீன் மனு திங்கள்கிழமை (அக்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் விசாரணையை மறுதேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், மதியழகன், பௌன்ராஜின் நீதிமன்றக் காவல் செவ்வாய்க்கிழமை (அக்.14) முடிவடைந்த நிலையில் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் இருந்து சிறப்பு விசாரணைக் குழுவினர் காணொலி வாயிலாக குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-இல் ஆஜர்படுத்தினர். அப்போது, இருவருக்கும் மேலும் 15 நாள்கள் நீதிமன்ற காவலை நீட்டிக்க வேண்டும் என்று அரசு வழக்குரைஞர் வாதிட்டார்.

அதற்கு தவெக தரப்பு வழக்குரைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளதால் குற்றம்சாட்டப்பட்டவர்களின் கருத்தை நேரில் கேட்டபிறகே காவல் நீட்டிப்பு குறித்து முடிவு செய்யவேண்டும் என்றனர்.

இதையடுத்து நீதிபதி எஸ்.பி.பரத்குமார், தவெக நிர்வாகிகள் வி.பி.மதியழகன், பௌன்ராஜ் இருவரையும் மீண்டும் புதன்கிழமை (அக்.15) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com