தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை: சென்னையில் பணம், தங்க நாணயம் பறிமுதல்

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.
Published on
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையினர் புதன்கிழமை சோதனை செய்தனர்.

தமிழகத்தில் அக்டோபர் மாதம் முதல் விழாக் காலத்தையொட்டி, சில அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் பொதுமக்களிடம் இருந்து பரிசு, லஞ்சம் வாங்குவதாகப் புகார் கூறப்படுகிறது. அதேபோல ஒப்பந்ததாரர்கள், வியாபாரிகள், தொழிலதிபர்கள், அரசு தொடர்புடைய பணிகளைச் செய்பவர்கள் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் மற்றும் பரிசு பொருள்கள் கொடுப்பதாக புகார் கூறப்படுகிறது.

இதைக் கருத்தில் கொண்டு ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் தொடக்கத்தில் இருந்தே அரசு அலுவலகங்கள் மீதான கண்காணிப்பை ஊழல் தடுப்புத் துறை தீவிரப்படுத்துகிறது. லஞ்சம் பெறப்படுவது தொடர்பாக உறுதியான தகவல்களின்பேரில், அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாள்களே இருக்கும் நிலையில், சில அரசு அலுவலகங்களில் அதிகாரிகளும், ஊழியர்களும் பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாகப் புகார்கள் வந்தன. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்புத் துறை டிஜிபி அபய்குமார் சிங் புதன்கிழமை உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் புகார்களுக்கு உள்ள அரசு அலுவலகங்கள், சந்தேகத்துக்குரிய அரசு அலுவலகங்கள் ஆகியவற்றில் ஊழல் தடுப்புத் துறையினர் புதன்கிழமை திடீர் சோதனை செய்தனர்.

சென்னையில் 5 அலுவலகங்கள்: சென்னை வியாசர்பாடியில் மின்வாரிய அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.18,000 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சென்னை மாநகராட்சியின் அம்பத்தூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.45,000 ரொக்கம், ஒரு தங்க நாணயம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதேபோல கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள ஒரு அரசு அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத ரூ.18,000, மற்றொரு அலுவலகத்தில் இருந்து ரூ.1.80 லட்சம் கைப்பற்றப்பட்டது. குன்றத்தூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து ரூ.19,000 பறிமுதல் செய்யப்பட்டது. தங்கச்சாலை பகுதியில் உள்ள தொழிலாளர் துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் கைப்பற்றப்படவில்லை.

இதேபோல, விழுப்புரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், திருவள்ளூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் அரசு அலுவலகங்களில் ஊழல் தடுப்புத் துறையினர் சோதனை செய்து, கணக்கில் வராத ரொக்கம், பரிசு பொருள்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனை முழுமையாக நிறைவடைந்த பின்னர், அதுகுறித்த தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com